தனுஷ் போல பிரித்விராஜ்.. என் படத்தை விட எம்புரான் படம் மிகப்பெரிய வெற்றிபெறும்.. ஈகோ இல்லாத விக்ரம்!
சென்னை: இந்த வாரம் திரையரங்குகளில் மிகப்பெரிய மோதல் வெடிக்க காத்திருக்கிறது. சல்மான் கானின் சிக்கந்தர், மோகன்லாலின் எம்புரான், சியான் விக்ரமின் வீர தீர சூரன் மற்றும் பாவனாவின் தி டோர் உள்ளிட்ட பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. எம்புரான் மற்றும் வீர தீர சூரன் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலேயே எம்புரான் படத்துக்கு மிகப்பெரிய அளவில் டிக்கெட் புக்கிங் மற்றும் தியேட்டர்கள் ஒதுக்கீடு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாளத்தில் இருந்து முதல் பான் இந்தியா படமாக எம்புரான் மாறும் என சியான் விக்ரம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தானும் மோகன்லால் ரசிகர் தான் என்று அவர் கேரள மக்கள் மத்தியில் பேசியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

தமிழ்நாட்டில் வீர தீர சூரன் திரைப்படம் பெரிதாக ஓடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பான் இந்தியா வெற்றியை எம்புரான் படம் பண்ண வேண்டும் என்று சியான் விக்ரம் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மார்ச்சில் மகா யுத்தம்: இந்த ஆண்டு இதுவரை ஜனவரியில் பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. பிப்ரவரியில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது. இந்நிலையில், மார்ச் மாத இறுதியில் மகா யுத்தம் நடப்பது போல சியான் விக்ரமின் வீர தீர சூரன் 2ம் பாகம் மற்றும் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படங்களுக்கு இடையே தமிழ்நாட்டில் போட்டி நிலவ காத்திருக்கின்றன. மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் படம் சென்னையில் ஓரளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு பாவனா நடித்துள்ள தி டோர் திரைப்படமும் தமிழில் வெளியாகிறது.

எம்புரான் பான் இந்தியா வெற்றி பெறணும்: மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மலையாளத்தை விட தமிழில் அதிக வசூல் வேட்டை நடத்தியது. உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் இந்தியிலும் கலெக்ஷனை வாரி குவித்தது. இந்நிலையில், பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மலையாள சினிமாவில் முதல் பான் இந்தியா படமாக வெற்றி பெறும் என சியான் விக்ரம் வாழ்த்தியுள்ளார்.
தனுஷ் போல பிரித்விராஜ்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த பிரித்விராஜ் திடீரென இயக்குநராக மாறி மோகன்லாலை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வருவதை பார்த்து வியப்பாகி விட்டது. எஸ்.ஜே. சூர்யா சார் இயக்குநராக இருந்து நடிகரானவர். பிரித்விராஜ் நம்ம தனுஷ் போல ஹீரோவாக இருந்து இயக்குநாக மாறியுள்ளார். அவரது வெற்றி என்னுடைய சொந்த வெற்றி போல என சியான் விக்ரம் எந்தவொரு போட்டி மனப்பான்மையும் இல்லாமல் எம்புரான் படத்திற்கும் அந்த படத்தின் இயக்குநர் பிரித்விராஜ் மற்றும் நடிகர் மோகன்லாலுக்கு வாழ்த்துகளை சொல்லியிருப்பதை பார்த்து இதுதான் எங்க சியான் என ரசிகர்கள் பூரித்துப்போய் வீர தீர சூரன் பட்த்துக்கு டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











