வெண்ணிலா கபடிக்குழு தொடங்கி சகலகலாவல்லவன் வரை சூரியின் விறுவிறு வளர்ச்சி ஒரு பார்வை
சென்னை: தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் நாயகன் நாயகி இருக்கிறார்களோ இல்லையோ சூரி இருக்கிறார், படங்களில் காமெடி செய்பவராக வந்தாலும் படத்தில் உண்மையான ஹீரோ சூரிதான் என்று சொல்லும் அளவிற்கு ஆலமரமாய் வேர் பரப்பி வளர்ந்து நிற்கிறார் சூரி.
2009 ம் ஆண்டில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலாக் குழு திரைப்படம் சூரியை ஒரு காமெடியனாக தனித்துத் தெரிய வைத்தது, அதற்குப்பின் சக நடிகர்களுடன் சேர்ந்து காமெடி செய்து வந்தார்.
தற்போது ஹீரோக்களுக்கு இணையான மற்றொரு நாயகனாக உயர்ந்து விட்டார் சூரி, 7 வருடங்களில் நாளொன்றுக்கு 7 லட்சம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்து வாகை சூடி நிற்கும் சூரியின் ஒரு விறுவிறு வளர்ச்சியை இங்கே பார்க்கலாம்.

நினைவிருக்கும் வரை
எல்லோருமே சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தில்தான் அறிமுகமானார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் சூரியின் முதல் படம் நினைவிருக்கும் வரை பிரபுதேவாவின் நண்பர்களில் ஒருவராக அந்தப் படத்தில் அறிமுகமானார் சூரி.

10 வருட போராட்டம்
22 வயதில் நடிக்க ஆரம்பித்த சூரி 1999 தொடங்கி 2008 வரை ஜேம்ஸ்பாண்டு, வர்ணஜாலம், ஜி, காதல், தீபாவளி உள்ளம் கொள்ளை போகுதே போன்ற படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

வெளிச்சத்தைக் கொடுத்த வெண்ணிலா கபடிக் குழு
2009 ம் ஆண்டு சுசீந்திரன் இயக்குனராக அறிமுகமான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் ஒரு காமெடியனாக சூரியை ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது, தொடர்ந்து சூரியின் நடிப்பில் வெளிவந்த களவாணி, நான் மகான் அல்ல போன்ற படங்களில் சூரி தனித்துத் தெரிய ஆரம்பித்தார்.

சூரியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படங்கள்
வேலாயுதம், போராளி, சுந்தரபாண்டியன், மனம் கொத்திப் பறவை போன்ற படங்கள் சூரிக்கு திரையுலகில் ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.

நாயகனுக்கு இணையான
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, பட்டையக் கிளப்பணும் பாண்டியா, தில்லு முல்லு, தேசிங்கு ராஜா, நிமிர்ந்து நில், ஒரே ஊருல ரெண்டு ராஜா போன்ற படங்களில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் சூரிக்கும் அளிக்கப்பட்டது.

நாயகனை விட ஒருபடி மேலே
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சகலகலாவல்லவன் திரைப்படத்தில் நாயகன் ஜெயம் ரவியை விடவும் சூரிக்கு முக்கியத்துவம் அதிகம் அளிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து சூரியின் கையில் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள் உள்ளன, அந்தப் படங்களில் எல்லாம் நாயகனை விட சூரிக்குத் தான் முக்கியத்துவம் அதிகம் என்று கூறுகிறார்கள்.

காரணம் என்ன
வடிவேலு விட்ட இடத்தை சந்தானம் பிடித்தார் தற்போது சந்தானத்திற்கும் ஹீரோவாகும் ஆசை வந்துவிட்டதால், தமிழ் சினிமாவில் தற்போது சூரியைத் தவிர வேறு சொல்லிக் கொள்ளும் காமெடியன்கள் என்று யாரும் இல்லை. இதனால் தமிழ் சினிமாவின் சோலோ காமெடியனாகி விட்டார் சூரி.

சூரியின் நன்றியுணர்வு
தமிழ் சினிமாவில் சூரியை காமெடியனாக அடையாளம் காட்டியவர் இயக்குநர் சுசீந்திரன் அதனால் சுசீந்திரன் எப்போது கால்ஷீட் கேட்டாலும் தேதிகளை வாரிவழங்கி விடுகிறார் சூரி.இந்த நன்றியுணர்வுதான் சூரியை இன்று உச்சத்தில் வைத்திருக்கிறது.

வெண்ணிலா கபடிக் குழு முதல் சகலகலாவல்லவன் வரை
வெண்ணிலா கபடிக்குழுவில் சில ஆயிரங்களில் தொடங்கிய சூரியின் வாழ்க்கை இன்று கோடிகளில் வந்து நிற்கிறது, தற்போது நடித்து வரும் படங்களில் ஒரு நாளைக்கு சுமார் 7 லட்சம் சம்பளம் வாங்குகிறார் சூரி. சம்பளம் 7 லட்சம் வாங்கினாலும் ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு படங்கள் வந்து குவிகின்றனவாம் சூரிக்கு அதுசரி...


Click it and Unblock the Notifications











