கூலி இசை வெளியீட்டு விழா.. படத்தில் எத்தனை பாடல்?.. உள்ளே போவதற்கு முன்பு ரஜினி சொன்ன செம ஸ்டேட்மெண்ட்
சென்னை: கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. அதனையொட்டி படத்தில் பணியாற்றியவர்கள் ஒவ்வொருவராக நேரு ஸ்டேடியத்துக்கு வர தொடங்கியிருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த்தும் வருகை புரிந்திருக்கிறார். ஸ்டேடியத்துக்குள் நுழையும் முன்பு அவர் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் கூலி. இதில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு ரசிகர்கள் முழு மூச்சாக தயாராகியிருக்கிறார்கள்.
கூலி இசை வெளியீட்டு விழா: படம் ரிலீஸாக இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ட்ரெய்லர் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இதில் ரஜினிகாந்த்,லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட கூலி படக்குழுவினர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அமீர்கானும் இதற்காக மும்பையிலிருந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் ஆல்பம்: படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு பாடலும் தலா மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள்வரை இருக்கின்றன. எட்டு பாடல்களில் ஏற்கனவே மூன்று சிங்கிள்கள் வெளியாகி அவற்றில் கூலி தி பவர் ஹவுஸ் மட்டும்தான் சூப்பர் வரவேற்பை பெற்றது. மற்ற இரண்டு பாடல்களும் சுமாரான ரெஸ்பான்ஸையே பெற்றன. அதேசமயம் இப்போது வெளியாகியிருக்கும் மற்ற ஐந்து பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
ரஜினி என்ன பேசப்போகிறார்?: இன்றைய ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவரது கவனமும் இருப்பது ரஜினி மீதுதான். ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே சூப்பர் ஸ்டாரின் பேச்சில் பல கன்டென்ட்டுகள் கிடைக்கும். அதிலும் இப்படத்தை இயக்கியிருப்பது கமலின் ரசிகர் என்பதால் நிச்சயம் இன்று நேரு ஸ்டேடியத்தில் ரஜினி பேசும்போது சிரிப்பு அலைக்கு பஞ்சம் இருக்காது என்பது பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது.
ஸ்டேடியம் வந்த ரஜினி: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் தனது காரில் நேரு ஸ்டேடியத்துக்கு வந்தார். அப்போது வெளியே இருந்த ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரசிகர்கள் எந்த மாதிரியான எனர்ஜியோடு இருக்கிறார்களோ அதே எனர்ஜியோடுதான் நானும் இருக்கிறேன். அவர்கள் போன்றே எனக்கும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஆண்டவன் இருக்கிறான்" என்றார்.


Click it and Unblock the Notifications











