பிரதமர், ஜப்பான் பிரதமருடன் விருந்தில் பங்கேற்ற தனுஷ்!

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சிறப்பு விருந்து அளித்தார்.
இதுபோன்ற விருந்துகளில் நாட்டின் முக்கிய பிரபலங்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 'கொலவெறி டி' என்ற பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த தனுஷுக்கு, பிரதமர் இல்லத்தில் நடைபெறும் விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த பாடல் ஜப்பான் முழுவதும் இரவு விடுதிகளிலும், டிஸ்கொதே கிளப்புகளிலும் பாடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் மாமனார் ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ஏற்கனவே நிறைய ரசிகர்கள் உண்டு. ரஜினியின் முத்து படம்தான் ஜப்பானில் முதன்முறையாக ஜப்பானிய மொழியிலேயே சப் டைட்டிலுடன் வெளியானது. இப்போது தனுஷின் பாடல் புகழ்பெற்றுள்ளது.
ஜப்பானி பிரதமருக்கு அவரை அறிமுகப்படுத்தும் விதத்திலும் இந்த விருந்து அமைந்தது.
தனுஷின் கொலவெறி பாடல் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிய வண்ணம் உள்ளது. பாகிஸ்தானிலும் இந்த பாடல் 'Where is Democracy?' என்ற பெயரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடன் விருந்து உண்ட அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாதது என தனுஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











