Dhanush: பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்து தடபுடலாக வாழை விருந்து வைத்த இட்லி கடை தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ் இன்று அதாவது ஜூலை 28ஆம் தேதி தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி, புகைப்படம் எடுத்து, தனது ரசிகர்களுக்கு பிரமாண்டமான முறையில் விருந்து வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் தனுஷ் கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளார். இவரை நடிகராக அறிமுகம் செய்து வைத்தது, அவரது அண்ணன், இயக்குநர் செல்வராகவன் தான். நடிகராக அறிமுகமான காலத்தில் அவர் மிகவும் உருவக்கேலிக்கு ஆளானவர். குறிப்பாக ரசிகர்கள், சில பத்திரிகைகள் ஏன் படப்பிடிப்புத் தளத்திலுமே கூட அவர் பல அவமானங்களை சந்தித்துள்ளார்.

நடிப்பு அசுரன்: தனது அட்டகாசமான நடிப்பினால், தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டது மட்டும் இல்லாமல், பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். நடிப்பைக் கடந்து, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, கதை, திரைக்கதை எழுதுவது, படம் இயக்குவது, படம் தயாரிப்பது என அட்டகாசப்படுத்தி வருகிறார்கள்.
விருந்து: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது பேசும்போது தனது ரசிகர்களிடம் கூறுவது, எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம்... போல்... வாழ்க்கை... என்பதைத்தான். இப்படியான நிலையில் இன்று தனது பிறந்த நாள் என்பதால் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் மிகவும் ஜாலியாக உரையாடி உள்ளார். அதிலும் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுப்பது என செம ஜாலியாக பிறந்த நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறார். தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தனுஷ், ரசிகர்களுக்கு தனது சார்பில் தடபுடலாக விருந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இட்லி கடை: அதேபோல் இந்த வீடியோக்களை பார்த்த பலரும், இட்லி கடை தனுஷ் தனது பிறந்த நாளில் தனது ரசிகர்களுக்கு தலை வாழை விருந்து வைத்து விட்டாரே என பேசி வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார். படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் இருந்து நேற்று என்ன சுகம் என்ற பாடல் முதல் பாடலாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் என இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள். இந்த பாடலையும் தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











