Paid Review - பணம் கொடுத்து பாசிட்டிவ் விமர்சனம் சொல்ல சொன்னது தனுஷா?.. ஆரம்பித்த புது பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் திரை விமர்சகர்களும், அதை எதிர்ப்பவர்களும் கலந்துகொண்டார்கள். அந்த எபிசோடு பயங்கர ட்ரெண்டானது. குறிப்பாக அந்த எபிசோடில் பேசிய திரை விமர்சகர் கலீலூர் ரஹ்மான் Paid Review இருப்பதாக ஓபனாக பேசி அப்ளாஸை அள்ளினார். அவரது பேச்சை பார்த்த ரசிகர்களோ, பணம் கொடுத்து விமர்சனம் செய்ய சொன்னது எந்த ஹீரோ என்ற் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். இந்நிலையில் புது பஞ்சயாத்து ஒன்று ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பிரபலமான நிகழ்ச்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கிவரும் அந்த நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அதில் பேசப்படும் பெரும்பாலான டாபிக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். அந்த எபிசோடு ஒளிபரப்பாகி முடிந்ததும் அது பலரிடம் விவாத பொருளாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்தான் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடும் அமைந்தது.
என்ன டாபிக்: பொதுவாக ஒரு சினிமா என்றால் அதை விமர்சனம் செய்வது வழக்கம்தான். அதுவும் ஸ்மார்ட் ஃபோன் காலமான இப்போதைக்கு பலரும் விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். அப்படி விமர்சனம் செய்பவர்களையும், அந்த விமர்சனத்தை எதிர்ப்பவர்களையும் கொண்டு அந்த நிகழ்ச்சி உருவாகியிருந்தது. இதில் ஏராளமான திரை விமர்சகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்தினை முன்வித்தார்கள்.

Paid Review: இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது என்றால் Paid Review விஷயம்தான். விமர்சகர்களை எதிர்ப்பவர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட வாதத்தில், 'பணம் வாங்கிக்கொண்டு இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்' என குறிப்பிடப்பட்டது. அதனை திரை விமர்சகர் அபிஷேக் கடுமையாக ஆட்சேபித்தார். அதுமட்டுமின்றி தனது பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு விமர்சகரான பிரசாந்த்தை சுட்டிக்காண்பித்து, 'இந்தியாவிலேயே Highest Paid Reviewer பிரசாந்த்தான்' என்று கூறி; நாங்கள் பணம் வாங்குவதில்லை என்று தெரிவித்தார்.
போட்டுடைத்த ரஹ்மான்: ஆனால் அதே தரப்பில் அமர்ந்திருந்த இன்னொரு விமர்சகரான கலீலூர் ரஹ்மானோ, ' Paid Review இருக்கத்தான் செய்கிறது. கடந்த வருடம் பெரிய ஹீரோ நடித்த ஒரு படத்தின் ரிலீஸ்போது எனக்கு அந்த ஹீரோவின் PRO டீமிலிருந்து ஃபோன் செய்து பட ரிலீஸ் அன்றே விமர்சனம் கொடுங்கள். அந்த விமர்சனத்தில் படத்தின் பாசிட்டிவ்வை மட்டும் சொல்லுங்கள். 25,000 ரூபாய் பணம் தருகிறோம் என கூறினார்கள். ஆனால் நான் வாங்க மறுத்துவிட்டேன்' என கூறினார்.
யார் அந்த ஹீரோ?: ரஹ்மானின் அந்தப் பேச்சு பலரிடம் வரவேற்பை பெற்றது. எதற்கும் அஞ்சாமல் நடந்த உண்மையை பொதுவெளியில் போட்டுடைத்ததற்கு பலரும் பாராட்டினார்கள். அவர் அப்படி பேசியதை தொடர்ந்து யார் அந்த ஹீரோ என்று தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது Second Show யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார் ரஹ்மான்.
ரஹ்மானின் பேச்சு: அவர் அந்த வீடியோவில், "நீயா நானாவில் நான் அப்படி பேசியதை தொடர்ந்து யார் அந்த ஹீரோ என்று பலரும் கேட்கிறார்கள். இப்போது சொல்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதனை அந்த ஹீரோவே இயக்கி நடிக்க செய்திருந்தார். அப்படம் அண்ணன், தங்கை சென்ட்டிமென்ட்டை அடிப்படையாக வைத்து உருவான படம். ஒரு பாடலுக்காக அதிலும் அந்த இரண்டு வரிகளுக்காக ஓடிய படம். அந்த ஹீரோ சைடிலிருந்துதான் என்னை தொடர்புகொண்டு பணம் தருவதாக சொன்னார்கள்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், 'ரஹ்மான் சொல்வதை பார்த்தால் ராயன் படம்தான். அப்போ தனுஷ்தான் பணம் கொடுத்து விமர்சனம் செய்ய சொல்லியிருக்கிறார் போல' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











