காடு, மலை, கடலைத் தாண்டி... தனுஷை முழுக்க முழுக்க ரயிலில் சுற்ற வைக்கும் பிரபுசாலமோன்!
சென்னை : பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படம் முழுக்க முழுக்க ரயிலில் படமாக்க திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனேகன், ஷமிதாப் என தனுஷிற்கு இந்தாண்டு வெற்றிகரமாகவே தொடங்கியுள்ளது. தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தை முடித்து விட்டு தற்போது, அவர் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சமந்தா, எமி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை முடித்து விட்டு பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

காடு, மலை, கடல்...
ஏற்கனவே, தனது முந்தைய படங்களான மைனா, கும்கி மற்றும் கயல் படங்களில் முறையே காடு, மலை மற்றும் கடல் சார்ந்த கதைக்களங்களைக் கையாண்டிருந்தார் இயக்குநர் பிரபுசாலமோன்.

ரயில் பயணங்களில்...
இந்நிலையில், தற்போது தனுஷை வைத்து இயக்கும் புதிய படத்தில், டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணமாகும் ஒரு இளைஞனின் கதையை படமாக்க திட்டமிட்டிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுமுக நடிகை...
இதற்காக, அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருகிறாராம். அதேபோல், படத்தின் நாயகியாக புதுமுக நடிகை ஒருவரை நடிக்க வைக்கலாம் என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளதாம்.

இமான் இசை...
இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











