விஜய் படத்தால் வந்த பிரச்னை.. திணறிய தயாரிப்பாளர்.. மிஸ் ஆன தனுஷ் படம்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றிருக்கும் அவர் இப்போது கர திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏப்ரல் 30ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. விக்னேஷ் ராஜா படத்தை இயக்கியிருக்க; மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் தனுஷுடன் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் ரவிக்குமார் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனுஷுடன் பணியாற்றியிருக்க வேண்டிய படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சினிமாவில் தனுஷ் அறிமுகமானபோது பலரும் அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்தார்கள். அவை அனைத்தையும் அவர் தனக்குள் வாங்கி வைத்துக்கொண்டு திறமையை வளர்த்து படிப்படியாக உயர்ந்தார். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவே, 'தனுஷ் ஒரு சர்வதேச நடிகர்' என்று புகழ்ந்திருக்கிறார். அவரது வாக்குபடியே ஹாலிவுட்டிலும் நடித்துவிட்டார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பட்டையை கிளப்பும் அவர் இரண்டு முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் என்பது அனைவருமே அறிந்ததுதான்.

கடந்த வருடம் சரியில்லை: ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களாக எதுவும் சரியாக அமையவில்லை. திருச்சிற்றம்பலம் திரைப்படம் மட்டும்தான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதற்கு அடுத்து வெளியான கேப்டன் மில்லர், ராயன், இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன், குபேரா உள்ளிட்ட படங்கள் எல்லாம் சுமார் வரவேற்பைதான் பெற்றன. இட்லி கடை திரைப்படத்தை திரைத்துறையில் இருப்பவர்கள் பாராட்டினாலும்; ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேசமயம் வசூலில் படம் திருப்திகரமான கலெக்ஷனை கொடுத்ததாகவே தெரிகிறது.
தனுஷின் கர: அவர் இப்போது போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க; கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய ரோலை ஏற்றிருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். போர்த்தொழில் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே இந்தப் படமும் அதே மாதிரியான ஒரு வெற்றியை கண்டிப்பாக கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தனுஷும், அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள். ஏப்ரல் 30ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி: இந்நிலையில் கர படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தனுஷும், நானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டிருந்தோம். ஒரு தயாரிப்பாளர் என்னை தொடர்புகொண்டார். அவர், விஜய் நடித்த ஒரு படத்தை முடித்து ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறேன் என கூறினார். மேலும் என்னிடம் தேதிகளை கேட்டு எனக்கும் ஒரு படம் செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.
தேதிகள் கொடுத்தார்: தனுஷ் பிஸியாக இருந்தாலும் அவரது தேதிகளை கஸ்தூரி ராஜா கொடுத்திருந்தார். நானும் படம் இயக்குவதை தொடங்கினேன். அந்தப் படத்துக்கு பூஜையும் போடப்பட்டது. கமல்ஹாசன் தான் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். படத்துக்கு ஓடிப்போலாமா என்று பெயர் வைத்திருந்தோம். ஃபோட்டோஷூட்டும்கூட முடித்துவிட்டோம். அந்த ஃபோட்டோஷூட்டில் தனுஷுக்கு பல லுக்குகள் இருக்கும். ஆனால் ரிலீஸான விஜய் படம் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் பிரச்னையை கொடுத்தது. எனவே ஓடிப்போலாமா ஷூட்டிங் மேற்கொண்டு நடத்த முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
