தனுஷ் செம உஷாராகிட்டாரே.. இட்லி கடையை காப்பாற்ற அவர் என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: தனுஷ் தானே நடித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் இட்லி கடை. இதில் அவருடன் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் என பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தனுஷ் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் இப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தனுஷ் ஒரு ஹிட் படம் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. அவரது லைன் அப்பில் கடைசியாக ஹிட் படம் என்றால் அது திருச்சிற்றம்பலம்தான். அதற்கு பிறகு அவர் நடித்த கேப்டன் மில்லர், ராயன், குபேரா ஆகிய மூன்று படங்களும், இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படமும் தோல்வியைத்தான் சந்தித்தன. அதிலும் ராயன் படத்தின் நிலைமைதான் ரொம்பவே பரிதாபமாக இருந்தது.
அப்படி என்ன ஆனது?: ஏனெனில் அந்தப் படம் அவருக்கு 50ஆவது படமாகும். மேலும் அவரே இயக்கவும் செய்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என பிரமாண்டமாகத்தான் உருவாகியிருந்தது. இருப்பினும் படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங் ஆகியவைகளில் தனுஷ் உச்சக்கட்டமாக சொதப்பியிருந்ததால் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை பெறவில்லை. கடுமையான ட்ரோலையும் சந்தித்தது.

குபேராவும் கவிழ்த்தது: அந்தப் படத்துக்கு பிறகு சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்தார். சேகர் சிறந்த இயக்குநர் என்பதால் கண்டிப்பாக கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களி விட்டதை இதில் பிடித்துவிடலாம் என தனுஷின் ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள். படமும் அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால் அப்படமும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அதேசமயம் தெலுங்கில் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை: இப்படி வரிசையாக தோல்வி, சுமார் என ரிசல்ட்டை பார்த்துவரும் தனுஷ் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டுமென்பதில் முனைப்போடு இருக்கிறார். அதனை மனதில் வைத்து இட்லி கடை படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரகனி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
ட்ரெய்லர் ரிலீஸ்: படமானது அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை பார்க்கையில் காலங்காலமாக தனுஷின் குடும்பம் இட்லி கடை வைத்திருப்பதும், அவருக்கும், பெரிய ஹோட்டல் வைத்திருக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கும் மோதல்தான் படத்தின் கதையோ என்று தோன்றுகிறது. ஒன்லைன் சுமாராக இருந்தாலும் மேக்கிங்கில் தனுஷ் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்று அவரது ரசிகர்கள் ட்ரெய்லரை பார்த்து நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
தனுஷின் பேச்சு: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய் தனுஷ், "படம் ரிலீஸாகும் அன்று காலை 8 மணிக்கே சில விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் நம்பாதீர்கள். 9 மணிக்கு படம் தொடங்கி 12.30 மணிக்குத்தான் முடியும். அப்போதுதான் படம் எப்படி இருக்கிறது என்றே தெரியும். அதனால் சரியான விமர்சனங்களை பார்த்து படம் எப்படி இருக்கிறது என்பதை முடிவு செய்யுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











