கஜா நிவாரணத்துக்கு கொடுக்கப்பட்டது ரூ.5 கோடியா? - அஜித் தரப்பில் விளக்கம்!
கஜா நிவாரண நிதி தொடர்பான வதந்திகளுக்கு அஜித் தரப்பு விளக்கமளித்துள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் ரூ. 5 கோடி கொடுத்ததாக இணையத்தில் வைரலான வீடியோ குறித்து, அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடந்த மாதம் 16ம் தேதி வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. தொடர்ந்து அம்மாவட்டங்களில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அரசு மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நிவாரண உதவிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் நடிகர் அஜித்தும் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 15 லட்சம் நிதி வழங்கினார். ஆனால், அவர் ரூ. 15 லட்சம் தரவில்லை, ரூ. 5 கோடி கொடுத்தார் என அஜித்தின் தீவிர ரசிகரும், சேலத்தில் அஜித் படங்களை பிரம்மாண்டமாக வெளியிடுபவருமான 7ஜி சிவா பேசிய வீடியோ இணையத்தில் வெளியானது.
சேலத்தில் இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவில், "அனைவருமே அஜித் சார் ரூ.15 லட்சம் கொடுத்தார் என்று சொல்வார்கள். ரூ.15 லட்சம் கிடையாது. 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாதது அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாகப் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்குத் தெரியும். அஜித் சார் எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்" என சிவா தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அஜித் ரசிகர்கள் பலரும், 'தல ரூ. 5 கோடி கொடுத்தார்' என டிவீட் வெளியிட்டு இதனை டிரெண்டிங் ஆக்கினர்.
இந்நிலையில், இது குறித்து அஜித் தரப்பில் நாம் விசாரித்தோம். அப்போது, "அஜித் சார் செய்யும் நன்கொடைகள் குறித்த தகவல்கள் அனைத்துமே செய்தித் தொடர்பாளர் வாயிலாகவே தெரிவிக்கப்படும். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் வாயிலாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்குச் சொல்லப்படும். இது தவறான தகவல்" என அவரது செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.
இதனால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











