மிரட்டலுக்கு அஞ்சுபவரா ரஜினிகாந்த்?.. விஜய்யை கெத்தாக்க சூப்பர் ஸ்டாரை வெத்து ஆக்கலாமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து தேர்தலில் களமிறங்கவிருக்கிறார் விஜய். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலும் தனித்து நிற்கக்கூடிய சூழலே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 'திமுகவின் மிரட்டலுக்கு அஞ்சிதான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை' என போகிறபோக்கில் தட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
'திமுக குடும்பத்தினர் ரஜினிகாந்த்தை மிரட்டி அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தார்கள். அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவும், சிஸ்டத்தையே மாற்றுவதற்கும் அவர் விரும்பினார். அந்த நேரத்தில் திமுக மிரட்டலை தாங்கும் மன வலிமை அவருக்கு இல்லாமல் போனது. இறுதியில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பிலேயே நடிக்க சென்றுவிட்டார். ஆனால் அனைத்து மிரட்டல்களையும் தாங்கும் மன வலிமை விஜய்க்கு இருக்கிறது. அவர் பின்வாங்கமாட்டார்'..

ரஜினி பயப்படக்கூடியவரா?: சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசியதுதான் அது. ரஜினிகாந்த் மிரட்டப்பட்டார் என்று, அவர் அதனால் பின்வாங்கிவிட்டார் என்றும் ஆதவ் பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள். உண்மையில் ரஜினிகாந்த் இது மாதிரியான மிரட்டல்களுக்கு பயப்படக்கூடியவரா?..
டைம் லிமிட்டே இல்லை: அரசியலில் எப்போதும் சர்வாதிகார குணம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்த லிஸ்ட்டில்தான் ஜெயலலிதாவை சேர்ப்பார்கள். 'நான் அசைந்தால் அசையும் உலகம் எல்லாமே' என்ற எண்ணத்தோடு அரசியலில் இயங்கியவர் அவர். அவரைப் பொறுத்த வரை தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்பதும், தனக்கு எதிராக யாரும் நிற்க நினைக்கக்கூடாது என்பதும்தான். அதனால்தான், விஜய்யின் தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற ஒரு வாசகம் போட்டதற்காக டைம் லிமிட்டே இல்லாமல் விஜய்யை கொடநாட்டிலும், இங்கேயும் காக்க வைத்தார். அப்படிப்பட்டவர் ஜெ.
முகத்துக்கு நேராகவே: அந்த ஜெயலலிதா 90களில் இன்னும் மூர்க்கமாக இருந்தார். முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அவர் அமர்ந்தபோது, தன்னை ஒரு அவதாரம் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். அதனால் அவரை ஏறெடுத்து பார்க்க துணியாதவர்கள் இருந்த சூழலில்; ரஜினிகாந்த் தைரியமாக எதிர்த்து கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். 1995ஆம் ஆண்டு சிவாஜிக்கு வழங்கப்பட்ட 'செவாலியே' விருது விழாவுக்கு ரொம்பவே தாமதமாக ஜெ வந்ததும்; அவரை பார்க்கக்கூட விருப்பமில்லாமல் முகத்தை திருப்பி கொண்டதும், பேசும்போது, ஜெயலலிதா தாமதமாக வந்ததை காட்டமாக குறிப்பிட்டு முகத்தில் அடித்த மாதிரி கூறினார்.
கரியரின் உச்சம்: அதேபோல், பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில், 'நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பரவிவிட்டது' என ஒரே போடாக போட்டார். இத்தனைக்கும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் அப்போது சிட்டிங் மினிஸ்டர். ரஜினி அப்படி பேசியதும், பறிபோனது வீரப்பனின் அமைச்சர் பதவி. அதனைத் தொடர்ந்து 96 தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால்கூட காப்பாற்ற முடியாது என்றும் அட்டாக் செய்தார். இப்படி,
கடும் மூர்க்கத்தனத்தோடும், சர்வாதிகாரத்தனத்தோடும் இருந்த ஜெயலலிதாவை; தனது கரியரின் உச்சத்தில் இருந்தபோதே எதிர்த்தவர் ரஜினி.
சிறுபிள்ளைத்தனம்: ரஜினியிடம் இருப்பது, தந்தை துணையால் வளர்ந்த பிறகு வந்த மூர்க்கத்தனம் இல்லை. இயல்பிலேயே அந்த குணம் அவருக்குள் ஊறி கிடக்கிறது. அவர் எவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் அவருக்குள் ஒரு சாமானிய முரட்டுத்தனம் இருக்கும். அந்த முரட்டுத்தனத்தின் வழியில்தான் திரைத்துறையிலும் சில காலம் இருந்தார். அதனால் அரசியல் ரீதியாக பல பிரச்னைகளை சந்தித்தவர். அப்படிப்பட்ட ரஜினியை திமுக மிரட்டியது; அதனால் அவர் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார் என ஆதவ் சொல்வது நிச்சயம் சிறுபிள்ளைத்தனம்தான்.

தவெகவின் கொள்கை?: அரசியலுக்கு அவர் வராததற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாக திமுகவிடம் காத்திரமான கொள்கை இருக்கிறது, அதிமுகவிடம் பெயருக்காவது கொள்கை இருக்கிறது; அந்த கொள்கைகளை சாய்த்துவிட்டு தனது ஆன்மீக அரசியல் கொள்கையை தமிழ்நாட்டில் விதைப்பது நடக்காத ஒன்று என உணர்ந்ததால் வராமல் இருந்திருக்கலாம். மாறாக, ஒரு கட்சி மிரட்டுவதால் தன்னுடைய முடிவிலிருந்து பின் வாங்குபவர் இல்லை. ஒருவேளை திமுக மிரட்டியிருந்தால்; கண்டிப்பாக அது ரஜினியின் ஈகோவை சீண்டி அவரை அரசியலுக்குத்தான் அழைத்து வந்திருக்கும். இவை அனைத்தையும் தாண்டி, அனைத்துக்கும் திமுக மீது பழி போடுவதையே தங்கள் கட்சி கொள்கைகளில் ஒன்றாக மாற்றியிருக்கும் தவெகவினர்; ரஜினி அரசியலுக்கு வராததற்கும் திமுகவை காரணம் சொல்வதை பார்த்தால்; சிரிப்புதான் வருகிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாடும்: ரஜினியை பொறுத்தவரைக்கும் அவர் தனது மனதில் என்ன தோன்றுகிறதோ செய்பவர், பேசுபவர். அதனால்தான் அவரை பலரும் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாதவர். திமுகவுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர். முரசொலி மேடையில்கூட, சீனியர் அமைச்சர்கள் குறித்து ரகளையான கமெண்ட் அடித்தார். பொதுவாக பயம் இருந்தால்தான் தயக்கம் வரும்; தயக்கம் வந்தால்; ஒரு மேடையில் ஏறி அதில் இருப்பவர்களையே கலாய்க்க முடியாது. அதையும் ரஜினி செய்தார். ஆனால் விஜய் அப்படி இல்லையே. தலைவா, மெர்சல் உள்ளிட்ட படங்களின் ரிலீஸுக்கு பிரச்னை வந்தபோது இதே விஜய் என்ன செய்தார் என்பதை ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்க்கத்தான் செய்தது. அதேபோல், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில், நிகழ்ச்சிகளுக்கு வரசொல்லி மிரட்டுகிறார்கள் என அஜித் கூற; கலைஞர் அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டியதையும் தமிழ்நாடு பார்க்கத்தான் செய்தது.
இப்போது விஜய்யை சுற்றி இருக்கும் பிரச்னைகளை மடைமாற்றுவதற்காக ரஜினியை உள்ளே இழுத்துவிடுவது, விஜய்தான் பெரிய மன வலிமை உடையவர் என்ற பிம்பத்தை செட் செய்வதெல்லாம் எப்போதும் தமிழ்நாட்டில் செட் ஆகாது என்பதை தவெகவினர் உணர வேண்டும். ரஜினிக்கு இருக்கும் மன வலிமையும், விஜய்க்கு இருக்கும் மன வலிமையும் வேறு வேறு. இதை ஒப்பிட்டு பேசுவதே எந்த விதத்திலும் அறம் ஆகாது என்பதுதான் அனைவரது கருத்தும். விஜய்யை கெத்து ஆக்குகிறேன் பார் என சொல்லி; ரஜினியை வெத்து ஆக்க முயற்சிக்கும் ஆதவ் அர்ஜுனா, 'மாற்று அரசியல் செய்ய வந்த விஜய்க்கு ஊரெல்லாம் செம மாத்து(அடி) வாங்கிக்கொடுக்கிறார்' என்பதுதான் நிதர்சனமான உண்மை..


Click it and Unblock the Notifications















