தியேட்டர் ஓனர்களின் சப்போர்ட் ’குட் பை’ சொல்லும் விஜய்க்கா? ’ஹாய்’ சொல்லும் சிவகார்த்திகேயனுக்கா?
சென்னை: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஏகப்பட்ட தியேட்டர் ஓனர்களை வாழ வைத்து வந்த விஜய் மக்களுக்கான சேவை செய்ய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். தனது கடைசி படமாக ஜன நாயகன் இருக்கும் என அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களை கொடுத்து பல ஆண்டுகளாக தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவரால் பயனடைந்துள்ளனர்.
தளபதி விஜய்க்கு சரியான ஃபேர்வெல்லை தமிழ் சினிமா செய்யுமா? என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால், அவர் அரசியலுக்கு வருவதே ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்து தான். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 10ம் தேதியே படத்தை வெளியிடப் போவதாக தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒருவேளை அப்படி நடந்தால், தியேட்டர் ஓனர்கள் அதிகளவில் திரையரங்குகளை சினிமாவுக்கு குட் பை சொல்லும் விஜய்க்கு ஒதுக்குவார்களா? அல்லது தொடர்ந்து தமிழ் சினிமாவின் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள சிவகார்த்திகேயனுக்கு ஒதுக்குவார்களா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
விஜய்யின் கடைசி படம்: அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் விடுமுறையான சுமார் 10 நாட்களை டார்கெட் செய்து வெளியாகிறது. பெரிய பட்ஜெட்டில் விஜய்க்கு மட்டுமே 250 கோடி சம்பளம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் லியோ படத்தை போல 600 கோடிக்கு மேல் வசூல் செய்தால் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரபாஸின் ராஜாசாப் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் கடுமையான போட்டியாக மாறி நிற்கின்றன.

நேரடி மோதல்: டான் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து சமீபத்தில், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி வரை ஜனவரி 14ம் தேதி தான் பராசக்தி வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஆனால், விஜய்க்கு டஃப் கொடுக்கும் விதமாக பராசக்தி படத்தை ஜனவரி 10 அல்லது ஜனவரி 9ம் தேதியே களமிறக்கப் போவதாகவும் சில பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிய நிலையில், விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், சிவகார்த்திகேயன் ஒருபோதும் இந்த நேரடி மோதலை விரும்பவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
தியேட்டர் ஓனர்கள் யார் பக்கம்?: திருப்பூர் சுப்ரமணியம் இப்போதே சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும், விஜய் அவருக்கு என்ன செய்தார் என்றும் பேசத் தொடங்கிவிட்டார். ஜன நாயகன் மற்றும் பராசக்தி உள்ளிட்ட படங்கள் ஒரே நாளிலோ அல்லது ஒரு நாள் வித்தியாசத்திலோ வெளியானால், விஜய் படத்துக்கு 550 தியேட்டர்களும் சிவகார்த்திகேயன் படத்துக்கு 450 தியேட்டர்களும் ஒதுக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தியேட்டர் ஓனர்கள் வருங்கால சினிமாவையும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நடிப்பதையும் கருத்தில் கொண்டால், வியாபார ரீதியாக விஜய் படத்திற்கு ஒதுக்குவதை விட சிவகார்த்திகேயனுக்கே ஒதுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
படத்தின் தரம்: இவை அனைத்தையும் தாண்டி அ. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜன நாயகன் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி என இரு படங்களும் வெளியான பின்னர், மக்கள் எந்த படத்தை கொண்டாடுகிறார்கள். எந்த படம் உண்மையாகவே நல்லா இருக்கோ அந்த படத்துக்கு ஆட்டோமேடிக்காக தியேட்டர்கள் அதிகரிக்கும் என்பது தான் நிதர்சனம்.


Click it and Unblock the Notifications











