ரஜினியின் இடத்தை பிடிக்க விஜய் செய்த வேலைகள்.. சீக்ரெட் சொன்ன முன்னாள் மேனேஜர்..யார் உடந்தை தெரியுமா?
சென்னை: அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் சினிமாவில் இருக்கும்போது அவருக்கும், ரஜினிக்கும்தான் போட்டி என்ற நெரேட்டிவ் செட் செய்யப்பட்டது. ஜெயிலர் படத்தின் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை சொல்ல; லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி கொடுத்துவிட்டு, ஒரே ரஜினிதான் என சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். அப்போதிருந்து இரண்டு பேரின் ரசிகர்களுக்குமிடையே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றன.
சினிமாவில் சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய்; அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் சினிமாவில் நடித்தபோது அவரது படங்கள் எல்லாம் நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டன என படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிடும். அதேபோல் விஜய் ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாக பெறுகிறார். இப்போதைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் விஜய்தான். ரஜினியின் இடத்தை அவர் பிடித்துவிட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.

காக்கா, கழுகு கதை: இப்படிப்பட்ட நிலைமையில் ஜெயிலர் படத்தில் ஹுக்கும் பாடலில் சில வரிகள் விஜய்யை தாக்கும்படி இருப்பதாக பிரச்னைகள் கிளம்பின. அப்படிப்பட்ட சூழலில் அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை சொல்லி மேற்கொண்டு பரபரப்பை உண்டு செய்தார். ரஜினி அப்படி சொன்னதை தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதுகுறித்து பேசிவிட்டு ஒரே ரஜினிகாந்த்தான் என கூறி முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். ஆனாலும் அன்றைய பேச்சின்போது வெளிப்பட்ட விஜய்யின் உடல்மொழி ரொம்பவே நக்கலாக இருந்தது.
ரசிகர்களின் மோதல் வாடிக்கை: இப்படி அவர் சினிமாவில் இருந்தபோது அவருக்கும், ரஜினிக்கும் போட்டி என்று செட் செய்யப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால் இரண்டு பேரின் சமீபத்திய படங்களும் அப்படி ஒன்றும் ஆஹோ ஓஹோவென்று இல்லை. அதேசமயம் விஜய்யின் படங்களைவிட ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வசூலில் பல படிகள் முன்னால் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் இடையே சோஷியல் மீடியாக்களிலும் மோதல்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
அரசியலுக்கு வந்த பிறகும்: விஜய் அரசியலுக்கு வந்த பிறகும் ரஜினியுடனான மோதல் தொடர்கிறது. தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சம்பந்தமே இல்லாமல் ரஜினியை இழுத்து அவதூறாக பேச; பலரும் கண்டனங்கள் தெரிவித்தார்கள். ஆனால் விஜய் அமைதியாகவே இருந்தார். எனில் ஆதவ்வின் பேச்சை விஜய் உள்ளுக்குள் ரசிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. பலரும் எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிலையில் அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி, 'காலம் பேசாது.. காத்திருந்து பதில் சொல்லும்' என பொடி வைத்திருந்தார். இதன் காரணமாக மீண்டும் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் உரசல் உண்டாகிவிட்டது.
செல்வக்குமார் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், "காக்கா கதை குறித்து பேசிவிட்டு ஒரு ரவுண்டு அடித்து மைக்கிடம் வருகிறீர்கள். அதில் ஒரு எகத்தாளம் வந்துவிட்டதுதானே. ரஜினியை விஜய்யோடு ஒப்பிடுவதே தவறு. அவர் வேறு நான் வேறு என்று முன்னரே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரச்னை ஆரம்பித்தபோதே அவர் சொல்லியிருக்க வேண்டும்.
விஜய்க்கு ஆசை உண்டு: ரஜினியின் இடத்துக்கு வர வேண்டும் என்று விஜய்க்கு ஆசை இருந்தது. அது எனக்கும் தெரியும். அந்த இடத்துக்கு வருவதற்காக அவர் என்னென்ன செய்தார் என்பதும் தெரியும். அதற்கு நானும் துணையாக இருந்தேன். என்னென்ன செய்தார் என்பதை வெளியே சொல்ல முடியாது. அது தொழில் ரகசியம். எதிலும் ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும். ரஜினி சும்மா வந்தவரா? அவர் வறுமையின் கொடுமையை பார்த்து கஷ்டப்பட்டு வந்தவர். எத்தனை போராட்டங்களை சந்தித்திருப்பார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications















