Vijay - விஜய்க்கு அதுதான் ஆசை.. ஆனால் ரசிகர்களுக்காக செய்யவில்லை.. ட்ரெண்டாகும் இயக்குநரின் பேட்டி
சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கும் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார்.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
டைம் ட்ராவல்: இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கமாண்டோ ட்ரெஸ்களில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார்.
கடைசி படம்: அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் என அறிவித்திருக்கிறார் விஜய். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்திருக்கின்றனர். அநேகமாக இப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும்; அந்தப் படத்துக்காக 200 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய்யை வைத்து காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு ஆகிய படங்களை இயக்கி விஜய்யை வித்தியாசமாக காட்டிய இயக்குநர் பாசில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ட்ரெண்டாகும் வீடியோ: அவர் அளித்த பேட்டியில், "விஜய்க்கு வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அவருடைய ரசிகர்களோ அவரை சண்டை காட்சிகள், பாடல்கள் நிறைந்த கமர்ஷியல் படங்களில் பார்க்கத்தான் ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் அவர் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்துவருகிறார்" என்றார். விஜய் தன்னுடைய கரியர் ஆரம்பத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் விழாவில்கூட இதுபோன்ற ஜானரில் படம் செய்ய ஆசையாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். ஆனால், திருமலை கொடுத்த வெற்றி அவரை கமர்ஷியல் பக்கம் திருப்பியது. அவரது கடைசி படம் வித்தியாசமான ஜானரில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











