'எந்த நோய் வந்தாலும் மருந்து கொடுத்தா சரியாக்கிடலாம்... ஆனா கொரோனா..? நடிகர் பார்த்திபன் புது யோசனை
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக ஹாஸ்பிடலை ஏற்படுத்து தொடர்பாக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் யோசனை ஒன்றை கூறியுள்ளார்.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

தீவிர நடவடிக்கை
இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியா முழுவதும் 468 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிருமி யுத்தம்
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகரும் இயக்குனருமான பார்த்திபனும் அரசுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த கிருமி யுத்தம் உலக யுத்தத்தை விட கொடுமையானது. இதில் இருந்து மக்களை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் பிரதமர், தமிழக முதல்வர், அமைச்சர்கள், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி.

இட வசதி இல்லை
மக்கள் கண்டிப்பாக இதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும். எந்த நோய் வந்தாலும் மருந்து கொடுத்தா அதை சரியாக்கிடலாம் என்பதை மீறி, இந்த கொரோனா வைரஸ்ல என்ன அச்சுறுத்தல்னா, இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க போதிய இட வசதி இல்லைங்கறதுதான் துயரமான செய்தி. இத்தாலி போன்ற வசதியான நாடுகள்லயே, அதை செயல்படுத்த முடியலை அப்படிங்கும்போது இந்தியா போன்ற நாடுகள்ல அதை செயல்படுத்தறது மிக மிகக் கடினமான விஷயம். இருந்தும் அரசு இது சம்மந்தமா தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருக்கு.

அவசர ஹாஸ்பிடல்
இதுல, எனக்கு ஒரு சின்ன யோசனை. போதிய ஹாஸ்பிடல் வசதி இல்லாத நிலையில, இந்த அவசர நிலையை சரி பண்ண, சில அவசர ஹாஸ்பிடல்... அதாவது மருத்துவ வசதியை கொடுப்பதற்கான சின்ன சின்ன இடங்களை நம்மால கிரியேட் பண்ண முடியுமா?, எம்.எல்.ஏ ஹாஸ்டல் இருக்கு, அரசு அலுவலங்கள் இருக்கு. அப்படிப்பட்ட இடங்கள்ல ஐசியூ மாதிரியான ஒரு வார்டை கிரியேட் பண்ண முடியாதே தவிர, தனிமைப்படுத்தற அளவுக்கு கிரியேட் பண்ணி கொடுக்க முடியுமா?

தற்காலிக ஏற்பாடு
அந்தந்த சாலை முனைகள்ல, சின்ன சின்ன இடங்கள்ல, ஹாஸ்பிடலை ஏற்படுத்த முடியுமா?
இப்ப நான் இருக்கிறது, நந்தனத்துல. கே.கே.நகர்ல எனக்கு மூனு பிளாட் இருக்கு. அதை நான் இப்ப கொடுத்து உதவலாம். அந்த மாதிரி ரெண்டு வீடு இருக்கிறவங்க, ஒரு வீட்டை கொடுத்து உதவலாம். இதை தற்காலிக ஏற்பாடா பண்ணலாம். இதை பண்றது எவ்வளவு தூரம் பிராக்டிக்கல்னு எனக்கு தெரியல.
ஊடக நண்பர்கள்
ஒரு சின்ன யோசனை அதை உங்ககிட்ட சொல்லாம்னு நினைக்கிறேன். உங்க ஆலோசனைகள்ல இதையும் வச்சுக்கலாம். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், இந்த செய்திகளை மக்கள்ட்ட சேர்க்கறதுக்கு, அச்சுறுத்தலை மீறி உழைச்சிட்டு இருக்காங்க... அவங்க இல்லைன்ன, என்ன நடக்குதுன்னே தெரியாம போயிரும். அவங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











