சென்னை வன்முறை... மொத்த போலீசையும் குற்றம் சொல்லக் கூடாது!- சூர்யா
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சென்னையில் அரங்கேறிய கொடிய வன்முறைக்கு ஒட்டு மொத்த போலீசாரையும் குறை சொல்லக் கூடாது என்று நடிகர் சூர்யா கூறினார்.
சூர்யா நடித்துள்ள 'சிங்கம்' படத்தின் 3-ம் பாகமான 'சி-3' வரும் பிப்ரவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சூர்யா பேசுகையில், "நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன. இதுவரை 35 படங்களில் நடித்துவிட்டேன். ஒரே இயக்குநருடன் 4 அல்லது 5 படங்களில் பணியாற்றுவது அரிது. ஆனால் ஹரியுடன் அது நடந்திருக்கிறது. அவரும் நானும் இணைவது இது 5வது படம் (ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சி3).

சினிமாவில் அறிமுகமானபோது துரைசிங்கம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றோ, எனக்காக அந்த கதாபாத்திரம் உருவாக்கப்படும் என்றோ நினைத்துப் பார்க்கவில்லை.
'சிங்கம்' படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே தான் இப்போது அதன் 3-ம் பாகத்தையும் உருவாக்கி உள்ளோம். இன்று சிங்கம் என்பதே ஒரு பெரிய பிராண்ட் ஆகிவிட்டது.
சி 3 எனது முந்தைய படங்களை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்துக்காக 120 நாட்கள் நடித்தேன். எல்லோரும் கடுமையாக உழைத்தார்கள். 300 பேரை வைத்து வேலை வாங்கினார் டைரக்டர் ஹரி. 200 இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த என் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ந்து பாராட்டினார்கள். என் அம்மா ரொம்ப பாராட்டினார்.. 'எப்படி இதுபோன்ற வசனங்களை எழுதுகிறார் ஹரி' எனக் கேட்டார்கள். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது," என்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவிடம், "ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசார் மீது மாணவர்கள் கோபமாக இருக்கும் இந்த நேரத்தில் போலீஸ் கதையம்சத்தில் 'சி-3' படம் வெளியாகிறதே?", என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில்அளித்த சூர்யா, "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில இடங்களில் வருத்தப்படும்படியான அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. சில போலீசார் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையே குற்றம் சொல்ல முடியாது. திருச்சியில் போலீஸ் அதிகாரி மயில்வாகனன் அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார். இதுபோன்ற போலீஸ் அதிகாரிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறோம். இருட்டறையில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றினாலே ஒட்டுமொத்த இருட்டையும் அது நீக்கும். வாழ்க்கையில் சிறந்த முன்மாதிரியாக இருப்பவர்களை பின்பற்றுவது நல்லது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியைத்தான் சி3 படம் பிரதிபலிக்கும்", என்றார்.


Click it and Unblock the Notifications











