தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்.. பிரசாரத்தில் அஜித்தை பயன்படுத்திய எடப்பாடி பழனிசாமி.. என்ன பிளான்?
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் விஜய்யும் களமிறங்கியிருப்பதால்; நான்கு முனை போட்டியாக மாறியிருக்கிறது தேர்தல் களம். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய நான்கு கட்சிகளும் வேட்பாளர்கள் லிஸ்ட்டையும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுவிட்டன. இது ஒருபக்கம் இருக்க பரப்புரை களமும் பயங்கரமாக சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதீத கவனத்தை பெற்றிருக்கிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் விஜய். அவர் தவெக கட்சியை ஆரம்பித்து கூட்டணிக்கு செல்வாரா இல்லை தனித்து களம் காண்பாரா என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அதை உடைத்த விஜய்; நாங்கள் எப்போதும் மக்கள் பக்கம்தான். மதசார்பற்ற கொள்கையில் எப்போதுமே சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று உறுதி அளித்து; தன் கட்சி தொண்டர்களின் நிம்மதி போகாமல் பார்த்துக்கொண்டார்.

கூட்டணிக்கு பேசவே இல்லை: இதற்கிடையே அவர் என்டிஏ கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானபோது, அக்கட்சியின ஆதவ் அர்ஜுனா, இரண்டரை வருடம் முதலமைச்சராக இருக்கலாம் என அவர்கள் டீல் பேசினார்கள். ஆனால் நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறினார். கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு ஏன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் நாங்கள் கூட்டணி பற்றியெல்லாம் விஜய் கட்சியோடு பேசவில்லை. ஒருவேளை அவர்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் எங்கள் வாக்கு வங்கிதான் பாதிப்படையும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஒரே போடாக போட்டார்.
இரண்டு தொகுதிகளில் விஜய்: நேற்று தவெகவின் 234 வேட்பளர்களும் அறிமுகம் செய்யப்பட்டார்கள். விஜய்யோ பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிடவிருக்கிறார். ஆனால் அவர் அப்படி முடிவு செய்திருப்பது அவரது தோல்வி பயத்தை காட்டுவதாக பேச்சுக்கள் எழுந்தன. முக்கியமாக திருச்சி கிழக்கில் விஜய்யை எதிர்த்து போட்டியிடும் திமுகவை சேர்ந்த இனிகோ இருதயராஜோ, 'திராணி இருந்தால் ஒரு தொகுதியில் விஜய் நிற்கட்டும். பெரம்பூரை விட்டுவிட்டு இங்கே மட்டும் நிற்கட்டும். நான் அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்' என சீறியிருக்கிறார்.

எடப்பாடியும் அட்டாக்: கட்சி ஆரம்பித்து இத்தனை வருடங்களில் விஜய் இப்போதுதான் நேரடியாக எதிர் முகாம்களிலிருந்து தாக்குதலை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார். இனிகோ இருதயராஜ் இப்படி என்றால்; எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, 'கொடுமையை பாருங்க. யாராவது இறந்து போனால் அங்கே போய் துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் இங்கே இறந்தவர்களின் குடும்பத்தை வரவழைத்து அனுதாபம் சொல்கிறார்கள். சினிமா அப்படித்தான் இருக்கும். டெக்னிக்கலாக இருக்கும்.
அஜித்தை யூஸ் செய்த எடப்பாடி: மக்கள் ஏமாற வேண்டாம். மனதில் இருக்கும் கஷ்டங்களை மறப்பதற்கு சினிமாவை பார்க்கலாம் ரசிக்கலாம். ஆனால் அதோடு விட்டுவிட வேண்டும். நிஜ வாழ்க்கைக்கு சினிமா ஒத்துவராது. தயவு செய்து இளைஞர்களும் பெண்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்' என விஜய்யை அட்டாக் செய்திருந்தார். சூழல் இப்படி இருக்க நேற்று நாகர்கோவிலில் பிரசாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவரும், அஜித்தும் அமர்ந்திருக்கும்படியான ஒரு புகைப்படத்தை ஃப்ரேம் செய்து அதை மக்கள் மத்தியில் காண்பித்தார். விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்யதான் ஈபிஎஸ் இப்படி ஒரு விஷயத்தை கையில் எடுத்திருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















