காலில் விழுந்தால் தடுத்துடுவார்.. அஜித்திடம் சூர்ய வம்சம் தேவயானி போல் செய்த ரசிகர்
சென்னை: அஜித்குமார் தனது கவனத்தை கார் ரேஸ் மீது செலுத்தியிருக்கிறார். உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தனது டீமுடன் களமிறங்கி முழு மூச்சாக ரேஸ் செய்து பரிசுகளையும் வெல்கிறார். அவர் எங்கே சென்றாலும் அங்கே ரசிகர்கள் சென்று அவரை சந்தித்து புகைப்படங்களும் எடுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் அஜித்தை சந்தித்தபோது அவரது காலில் விழுந்த வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
அஜித் சினிமாவுக்கு நடிக்க வந்ததிலிருந்தே அவருக்கு கார் ரேஸ் மீது ஒரு கண் இருந்தது. திரைத்துறையில் அவர் வளர்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே சில பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட விபத்து அவருக்கு பல அறுவை சிகிச்சைகளை செய்யும் நிலைமையையும் உருவாக்கி; படுக்கையிலும் இருக்க வைத்தது. அவர் ரேஸில் கலந்துகொண்டு தொடர்ந்து விபத்துகளை சந்தித்ததால் சினிமாவில் மோசமான நிலைமைக்கும் சென்றார். இனிமேல் இப்படியே இருந்தால் சினிமா நம்மை தூக்கி எறிந்துவிடும் என்பதை உணர்ந்து ரேஸுக்கு மூட்டை கட்டி சினிமா கரியரில் கவனம் செலுத்தினார்.
இப்போது ரேஸில் கவனம்: அதன் பலனாக டாப் 5 நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இப்போது மீண்டும் அவருக்கு கார் ரேஸில் கவனம் திரும்பியிருக்கிறது. முன்னர் போல் இல்லாமல் சரியான திட்டமிடலுடன் களமிறங்கியிருக்கிறார். தனக்கென ஒரு ரேஸிங் டீமை உருவாக்கி உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று பந்தயங்களில் கலந்துகொள்கிறார். அவரது இந்த செயல்பாடுக்கு ஏகேவின் குடும்பத்தினரும் முழு ஆதரவை வழங்கிவருகிறார்கள்.

எங்கே போனாலும் ரசிகர்கள்: அவர் எந்த நாட்டுக்கு சென்று ரேஸ் செய்தாலும் அங்கே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி அஜித்தை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துவருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி சிம்பு, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, அனிருத், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்களும் சென்று ரசிக்கிறார்கள். மேலும் அவரது ரேஸிங் தொடர்பான ஆவணப் படம் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது வெளியான பிறகு இந்தியாவில் கார் ரேஸ் விளையாட்டு மீதான ஆர்வம் பலருக்கு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.
அத்துமீறும் ரசிகர்கள்: அஜித்தை ரசிகர்கள் அன்பின் நிமித்தமாக சந்திக்கிறார்கள். அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு சளைக்காமல் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் ரசிகர்கள் சத்தம் போடுவது, தொந்தரவு கொடுக்கும்படி நடந்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்புகூட ஒரு சர்க்யூட்டில் அத்துமீறிய ரசிகர்களிடம், 'ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள். இது தியேட்டர் இல்லை. நம்ம மானமே போகுது' என ஏகே கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர் செய்த செயல்: இந்நிலையில் ரசிகரின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அஜித்தை சந்தித்த அந்த ரசிகர் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது கையில் அவர் வைத்திருந்த பொருள் ஒன்று கீழே விழுந்துவிட்டது. அதை குனிந்து எடுக்கும் சாக்கில் அஜித்தின் காலை தொட்டு வணங்கிவிட்டார். மற்றவர்கள் தனது காலில் விழுவதை அஜித் எப்போதுமே விரும்புவதில்லை. அப்படி யாராவது செய்தால் உடனடியாக தடுத்துவிடுவார். அதை தெரிந்துகொண்ட இந்த ரசிகர் சூர்யவம்சம் பட தேவயானி போல் செய்துவிட்டார் என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்ஸ் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











