செருப்பாய் தேய்ந்த பிரித்விராஜ்.. மாஸ் காட்டும் ஆடு ஜீவிதம்.. மகிழ்ச்சியில் படக்குழு!
சென்னை: மலையாள நடிகர் பிரித்விராஜ், நஜீப் முகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இதில் நடிகை அமலா பால் பிரித்விராஜின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆஸ்கார் வின்னர்களான ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகிய இருவரும் பணியாற்றி உள்ளனர். இப்படத்திற்காக கிட்டத்தட்ட 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து செருப்பாய் தேய்ந்துள்ளார்.
ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவின் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படமாகும். இப்படம் மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம்என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. கடனை அடைப்பதற்காக சவூதி செல்லும் பிரித்விராஜ், அங்கு ஆடு மேய்ப்பவராக மாறுகிறார். அதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் ஆடு ஜீவிதம் படத்தின் கதை.

சூப்பர் அப்டேட்: இத்திரைப்படம் மார்ச் 28ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது. பிரித்விராஜ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பாலைவனத்தில் கஷ்டப்படும் பிரித்விராஜின் உணர்ச்சிமயமான காட்சிகள் மனதை பிசைந்தன. அதேபோல, லிப் லாக் காட்சியில் நடித்ததற்காக அமலா பால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில், தேசிய விருது பெற்ற பிளெஸ்ஸி இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நஜீப்பாக நடித்த பிருத்விராஜ் 72 மணி நேரம் உணவு எதுவுமே உட்கொள்ளாமல் இருந்ததாகவும், மீதி நேரங்களில் வெறும் காபி மற்றும் தண்ணீர் மட்டுமே குடித்து 31 கிலோ எடையை குறைத்ததாக கூறினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தனது உடலை இரண்டு முறை குறைக்க நேர்ந்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இப்படத்தில் பிரித்வியின் நடிப்பு ஒரு தூண் என்றால், இன்னொரு தூணாக நிற்பது ஏ ஆர் ரஹ்மானின் இசை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, தன்னுடைய பின்னணி இசையில் தான் ஒரு ஆஸ்கர் நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்து இருந்தார் ரஹ்மான்.
ரூ 150 கோடிவசூல்: 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம். முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது படம் வெளியாகி 25 நாட்களை கடந்து விட்ட நிலையில், உலகம் முழுவதும் படம் 150 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரித்விராஜின் நடிப்புக்கு கிடைத்த பரிசு என்று இணையத்தில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











