ரஜினியை வைத்து அரண்மனை 5.. பேயாக கமல்ஹாசன்.. சுந்தர்.சி அப்படி செஞ்சிடுவாரோ?.. ரசிகர்கள் பயம்
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக நேற்று கோலிவுட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே ரஜினியும், சுந்தர்.சியும் அருணாச்சலம் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தார்கள். இப்போது பல வருடங்கள் கழித்து அவர்கள் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், ரசிகர்களுக்கு மத்தியில் பயத்தையும் கொடுத்திருக்கிறது.
கூலி படத்தில் நடித்து சூடுபட்டுக்கொண்ட ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதன் கோவா ஷெட்யூல் சமீபத்தில்தான் முடிந்தது. இப்படத்துக்கு பிறகு அவர் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருந்தன. அவரும், கமலும் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் சில மாதங்களாகவே ஓட ஆரம்பித்தது.
சுந்தர்.சியுடன் கூட்டணி: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி படம் இயக்க அதில் ரஜினி ஹீரோவாக நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படமானது 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என்றும் ஃபிக்ஸ் செய்யப்பட்டுவிட்டது.

கமலின் நெகிழ்ச்சி: அந்த அறிவிப்போடு கமல்ஹாசன், "காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173" என்று குறிப்பிட்டிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அவர் தயாரிப்போடு மட்டும் நின்றுவிட்டார்.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்: ரஜினிகாந்த் கடந்த சில காலமாகவே தற்போதைய தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றிவருகிறார். அதில் பா.இரஞ்சித்தும், நெல்சன் திலீப்குமாரும் மட்டுமே அவருக்கு திருப்தி தரக்கூடிய படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவேதான் அவர் ரூட்டை இப்போது மாற்றி சீனியர் இயக்குநரான சுந்தர்.சியுடன் இணைந்திருக்கிறார் என திரைத்துறையினர் முணுமுணுக்க தொடங்கியிருக்கிறார்கள். அருணாச்சலம் போன்று ஒரு ஹிட் படத்தை சுந்தர் கண்டிப்பாக கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் பயம்: இருந்தாலும் அவர்களில் ஒருதரப்பினருக்கு பயம் இருக்கத்தான் செய்கிறது. சுந்தர்.சி அரண்மனை சீரிஸ் படங்களை வைத்தே கரியரை சில வருடங்களாக ஓட்டிக்கொண்டிருக்கிறார். அதிலிருந்து வெளியே வந்து எடுத்த கேங்கர்ஸ் படமெல்லாம் படுத்துவிட்டது. ஒருவேளை ரஜினியை வைத்து அரண்மனை 5 எடுத்தாலும் எடுத்துவிடுவார். சர்ப்ரைஸாக கமல்ஹாசனையே பேயாக நடிக்க வைத்தாலும் நடிக்க வைத்துவிடுவார் என்று கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
மேலும் அவரது படங்கள் என்றாலே கிளாமரும், குத்து பாட்டும் இருக்கும். வட மாநில ஹீரோயினுடன் ரஜினியை ஆட வைத்துவிடுவாரோ என்றும் ஜாலியாக கேள்வி எழுப்பிவருகிறார்கள். அதேசமயம் இந்த மாதிரி தகிடுதத்தங்கள் எதுவும் செய்யாமல் ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜோடு படத்தை உருவாக்கினால் தப்பிக்கலாம் என அறிவுரையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











