தென்னிந்திய சினிமாவை குறை கூறிய ஜோதிகா.. வாயை திறப்பீர்களா சூர்யா?.. காட்டமான ரசிகர்கள் கேள்வி
சென்னை: அஜித் நடித்த வாலி திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸை தமிழில் தொடங்கிய அவர்; அதிகம் இப்போதெல்லாம் ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்த சூழலில் தென்னிந்திய சினிமாக்களை குறை கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்த வாலி படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. அந்தப் படத்தில் சில காட்சிகளிலும், ஒரு பாடலிலும் மட்டுமே தோன்றியிருந்தார். அப்போதே அவருக்கான மவுசு அதிகரிக்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி வரிசையாக படங்களில் நடித்த அவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல், சிம்பு என பலருடன் ஜோடி போட்டு நடித்து கோலிவுட்டில் பல வருடங்கள் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்தார்.
சூர்யாவுடன் காதல்: இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த சூர்யாவுடன் காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் பல வருடங்கள் தீவிரமாக காதலித்துவந்தார்கள். ஆனால் சிவக்குமார் முதலில் அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். திருமணம் ஆனதிலிருந்து சில வருடங்கள் நடிக்காமல் இருந்த அவர் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார். அதன்படி 36 வயதினிலே, ராட்சசி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், தம்பி, உடன்பிறப்பே என ஏராளமான படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் சில படங்கள் ஹிட்டாகின, சில படங்கள் தோல்வியடைந்தன. இருந்தாலும் ஜோதிகாவின் கதை தேர்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. கண்டிப்பாக இன்னும் ஏராளமான தமிழ் படங்களில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஜோ வைத்த ட்விஸ்ட்: ஆனால் ஜோதிகா என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது முழு கவனத்தையும் பாலிவுட் பக்கம் திருப்பினார். அப்படி அவர் அங்கு ஸ்ரீகாந்த், ஷைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜோதிகாவின் நடிப்புக்கும் பெரிதாக எந்தவிதமான ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை.

ஜோதிகாவின் கருத்து: இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் ஜோதிகா ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் தென்னிந்திய சினிமாவிலிருந்து வருகிறேன். அங்கு ஆண்களை முன்னிலையாக கொண்ட படங்கள்தான் அதிகம் வருகின்றன. இப்போது மாற்றங்கள் வந்திருக்கின்றன. பாலிவுட்டிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஆண்களுக்காகத்தான் அதிகம் எழுதப்பட்டிருக்கும். பெண்கள் கதாபாத்திரம் முழுமையடைந்ததாக இருக்காது.
வாயை திறங்கள் சூர்யா: தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பெண்கள் நடனமாடவும், ஆண்களை புகழவும்தான் பயன்படுத்தப்படுகிறார்கள். அது இப்போதும் இருக்கிறது" என்றார். ஜோதிகாவின் இந்தக் கருத்துக்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துவருகிறார்கள். மொழி, சந்திரமுகி, ராட்சசி போன்ற ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்துவிட்டு ஜோ இப்படி பேசியிருக்கவேக்கூடாது. எந்த தைரியத்தில் அவர் இப்படி பேசினார் என்று கூறும் ரசிகர்கள்; நடிகரும், ஜோதிகாவின் கணவருமான சூர்யா இந்த விஷயத்தில் மௌனம் காக்கக்கூடாது; கண்டிப்பாக வாயை திறந்து விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் காட்டமான கோரிக்கையை முன்வைத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











