Fire: ஃபயர் படத்துக்கு அப்புறம் என் சம்பளம் பல மடங்கு உயர்ந்துடுச்சு.. தயாரிப்பாளர் காலில் விழுந்த பாலா!
சென்னை: ஜெ. சதீஷ் குமார் தயாரித்து இயக்கிய ஃபயர் படத்தில் காசி கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி முருகதாஸ் தயாரிப்பாளர் காலில் விழுந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேலும், நடிகர்கள் என்றால் தங்களின் சம்பளத்தை வெளிப்படையாக சொல்லக் கூடாது என ஏதாவது சட்டம் உள்ளதா? எனக் கேட்டுவிட்டு தனது சம்பள உயர்வையும் மேடையிலேயே போட்டு உடைத்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.
யாஷிகா ஆனந்தின் நண்பரான பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். அந்த சீசனில் ஆரி அர்ஜுன் உடன் அவர் மோதியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டைட்டில் வின்னராக ஆரி அர்ஜுனன் வெற்றிப் பெற்ற நிலையில், ரன்னர் அப்பாக மாறினார் பாலாஜி முருகதாஸ்.

அதன் பின்னர் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று வனிதா விஜயகுமார், ஜூலி உள்ளிட்ட எக்ஸ் போட்டியாளர்களுடன் விளையாடி டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார் பாலாஜி முருகதாஸ்.
ஃபயர் படத்தில் பாலா: பிக் பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் வா வரலாம் வா எனும் படத்தின் மூலம் ஹீரோவாக கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான ஃபயர் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். காசி எனும் கதாபாத்திரத்தில் இளம் பெண்களை ஏமாற்றும் கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் இந்த படத்தில் நாயகனாகவே மாறிவிட்டார் பாலாஜி முருகதாஸ்.
நான்கு ஹீரோயின்கள்: ஹீரோவாக இருந்தால் கூட இத்தனை ஹீரோயின்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சாக்ஷி அகர்வால், ரட்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன் மற்றும் காயத்ரி என நான்கு ஹீரோயின்களுடன் ஃபயர் படத்தில் பலான காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிக்கேற்றினார்.
45 லட்சம் சம்பளம்: பொதுவாகவே ஹீரோக்களின் சம்பளங்களை பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள். அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனே தனக்கு பல தயாரிப்பாளர்கள் சம்பளத்தை ஒழுங்காக தருவதில்லை என்றும் பாதி சம்பளத்தை பிடுங்கிக் கொள்கின்றனர் என்று தான் புலம்பினார். ஆனால் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சம்பளம் 15 லட்சத்தில் இருந்து 45 லட்சம் ஆக உயர்ந்து விட்டது என்றும் இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெ. சதீஷ் குமார் தான் என்றார்.
காலில் விழுந்த பாலா: நடிகர்கள் சம்பளத்தை பொதுவெளியில் சொல்லக்கூடாது என்கிற ரூல் ஏதாவது இருக்கிறதா? என சொல்லிவிட்டு தனது சம்பளத்தை வெளிப்படையாக அறிவித்த பாலா அதற்குக் காரணமான தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமாரின் காலில் விழுந்து வணங்கிய காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளன. பல தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் எடுத்தாலும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்க மட்டும்தான் வருவேன் புரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட வரமாட்டேன் சொல்கிறவர்கள் மத்தியில் இவர் பண்றது சிறப்பான விஷயம் என பாராட்டுகின்றனர்.
அட்வான்ஸ் புக்கிங்: தனது சம்பளம் 45 லட்சமாக உயர்ந்துவிட்டது என்றும் இதற்கு மேல் தன்னை வைத்து படமெடுக்க நினைப்பவர்கள் இந்த சம்பளத்தை கொடுங்க என அட்வான்ஸ் புக்கிங்கில் கேட்பது போல உள்ளது என்றும் பாலா ரொம்பவே பிழைக்கத் தெரிந்த பிள்ளையாக மாறிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











