சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் பெயரை பயன்படுத்தி மோசடி... எச்சரிக்கும் நிறுவனம்
சென்னை : தமிழ் சினிமாவின் மிக முக்கியமான டாப் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இவர் தற்போது எதற்கும் துணிந்தவன், வாடிவாசல், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் அடுத்தடுத்து வரிசையாக நடித்து வருகிறார்.
அதோடு தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பேனரில் பல படங்களை சூர்யா தயாரித்து வருகிறார். தற்போது 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் டி.ஜி.ஞானவேல் இயக்கும் ஜெய் பீம், ரம்யா பாண்டியன் மற்றும் வாணி போஜன் நடிக்கும் ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், ஜோதிகா, சசிகுமார் நடிக்கம் உடன்பிறப்பே, அருண் விஜய் மற்றும் ஆர்னவ் விஜய் நடிக்கும் ஓ மை டாக் ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த படங்கள் அடுத்த 4 மாதங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் என சமீபத்தில் தான் சூர்யா அறிவித்திருந்தார். இந்நிலையில் 2டி என்டர்டைன்மென்ட் பெயரை பயன்படுத்தி சிலர் சோஷியல் மீடியா மூலம் மோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி 2டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2டி என்டர்டைன்மென்ட் பெயரில் போலி இமெயில் ஐடி உருவாக்கி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 2டி நிறுவனத்தின் பெயர், லோகோ ஆகியவற்றையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஆடிசன் நடத்தப்படுவதாக சொல்லி அதற்காக பணம் வசூலித்து வருகின்றனர்.
2டி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் அப்படி எந்த ஆடிசனையும் நேரடியாக நடத்துவதில்லை. எந்த அனைத்து படங்களுக்கான ஆடிசனையும் சம்பந்தப்பட்ட டைரக்டர் குழு மூலம் அவர்களின் அலுவலகங்களிலேயே நடத்துகிறோம். ஆடிசனுக்காக நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.
2டி என்டர்டைன்மென்ட் பெயர் மற்றும் லோகோவை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும், இது போன்ற நபர்களை நம்ப வேண்டாம். இது போல் வரும் இமெயில் மற்றும் ஆடிசன் நடத்துவதாக கூறுபவர்களின் உண்மை தன்மையை அறியாமல் உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீப காலமாக சினிமா பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடிகர் ஆர்யா திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபட்டதாக நீண்ட நாட்களாக ஒரு விவகாரம் நடந்து கொண்டிருந்தது. இந்த விவகாரத்தில் 2 நாட்களுக்கு முன்பு தான் மோசடி நபர்கள் 2 பேரை கைது செய்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர் போலீசார்.
இந்த விவகாரம் ஓய்வதற்குள் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் பெயரில் மற்றொரு கும்பல் மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











