விஜய் படம்னாலே பிரச்னைதானே.. யாரும் இவ்வளவு பார்த்திருக்கமாட்டாங்க.. ரொம்ப கஷ்டம்தான் பாஸ்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதால் ரிலீஸ் தேதியிலிருந்து தள்ளிப்போனது. இதனால் அவரது ரசிகர்கள் அப்செட் ஆனாலும்; எத்தனையோ பிரச்னைகளை பார்த்துவிட்டோம்; இதை சமாளிக்கமாட்டோமா என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய்யின் படங்கள் பிரச்னைகளை சந்தித்திருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தோடு திரைத்துறைக்கு குட் பை சொல்லவிருக்கிறாராம். எனவே ஜனநாயகன் படத்தை ஒரு பண்டிகை போல் கொண்டாட தயாரானார்கள் ரசிகர்கள். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள் ரசிகர்கள். எனவே ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸிலிருந்து படமானது தள்ளி போயிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
தொடர்ந்து பிரச்னைகள்: விஜய்யின் படங்கள் என்றாலே ரிலீஸின்போது கண்டிப்பாக ஒரு பிரச்னை வரும் என்ற நிலைமைதான் கடந்த பல வருடங்களாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி படம்தான் முதலில் பெரிய பிரச்னையை சந்தித்தது. அப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளை சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக சொல்லி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனையடுத்து குறிப்பிட்ட சில காட்சிகளில் மியூட் போடப்பட்ட ரிலீஸ் செய்யப்பட்டது.

தலைவா: விஜய்யின் படங்களிலேயே தலைவா படம் சந்தித்த பிரச்னைதான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். டைம் டூ லீட் என்ற வாசகம் இடம்பெற்றதால் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பட ரிலீஸுக்கு முட்டுக்கட்டை போட்டார். உடனே கொடநாடுக்கு சென்று முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்தார்கள் தந்தை எஸ்.ஏ.சியும், மகன் விஜய்யும். ஆனால் அவர்களை சந்திக்கவில்லை ஜெ. பிறகு கைகட்டியபடி வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் வைத்தார் தளபதி. அதனையடுத்துதான் படம் ரிலீஸானது.
கத்தி: மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. அதனை தயாரித்த லைகா நிறுவனம் ராஜபக்சேவுடன் தொடர்புடையது என சொல்லி தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. பிரச்னை முற்றியதை அடுத்து தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்தார்கள். இரண்டு படங்களுக்கு பிறகு மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் படத்தில் தமிழ்நாடு அரசின் இலவச திட்டங்களை எரிக்கும்படி காட்சிகள் இருந்தன. எனவே பிரச்னை முற்றியது. பிறகு அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.
மெர்சல்: இதற்கிடையே அட்லீ இயக்கத்தில் நடித்த மெர்சல் படத்துக்கும் சிக்கல்தான். ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களை விமர்சித்து வசனங்கள் வைக்க; விஜய்யை மத ரீதியாக பேசி பிரச்னையை வளர்த்தது பாஜக. ஒருவழியாக அத்தனையையும் சரி செய்து படம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. ஒருவழியாக அதுவும் முடித்து வைக்கப்பட்டு படம் ரிலீஸானது.
மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜனநாயகன்: அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மாஸ்டர் போது ஐடி ரெய்டு நடந்தது. மீண்டும் நடித்த லியோ படத்திலும் போதை பொருள் பழக்கத்தை ஆதரிக்கும்வகையில் நா ரெடி பாடல் இருப்பதாக சொல்லி சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்த பீஸ்ட் படத்தில் இஸ்லாமிய அமைப்புகளை தவறாக சித்தரித்துவிட்டதாக சொல்லி குவைத், கத்தார் நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டது. இப்போது ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையில் சிக்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











