அஜீத் 55.. திரைக்கதை வேலை முழுமை பெற்றது... மார்ச் இரண்டாவது வாரம் ஷூட்டிங்!
சென்னை: அஜீத்தை வைத்து கவுதம் மேனன் முதல் முறையாக இயக்கும் புதிய படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்து, லொகேஷனும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.
மார்ச் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவித்துள்ளார்.
கவுதம் மேனனுக்கு இது கனவுப் படம் மாதிரிதான். ஏற்கெனவே அஜீத்துடன் அவர் இணையவிருந்த படம், அறிவிப்பு வெளியான நிலையில் ரத்தானது. அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து படம் பண்ணுவதாக அறிவிக்கப்பட்டு அதுவும் கடைசியில் ரத்தானது.

இந்த நிலையில் அஜீத்தே தேடி வந்து மீண்டும் ஒரு வாய்ப்பளித்தார் கவுதம் மேனனுக்கு. அதுதான் இந்தப் படம்.
சிம்பு படத்தை முடித்துவிட்டு, அஜீத் படத்தின் திரைக்கதைப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார் கவுதம் மேனன். அஜீத்துக்கு திருப்தியளிக்கும் வகையில் கச்சிதமாக திரைக்கதையை முடித்துவிட்ட கவுதம் மேனன், படப்பிடிப்புக்கான லொகேஷன்களையும் பார்த்து வைத்துவிட்டார்.
வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளனர்.
அஜீத்துக்கு இது 55வது படமாகும். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த நடிகை அறிமுகமாகிறார்.


Click it and Unblock the Notifications











