ஹேப்பி பர்த்டே சீயான்!
இன்று நடிகர் விக்ரமுக்கு பிறந்த நாள். இந்த நாளை அவர் சீனாவில் ஐ படப்பிடிப்பில் கொண்டாடுகிறார்.
தமிழின் டாப் 5 நடிகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார் விக்ரம். பல ஆண்டுகள் போராடி அவர் பெற்ற இடம் இது. அந்த போராட்டத்தை ஒவ்வொரு கணமும் உணர்வதால், எந்த அளவுக்கும் இறங்கி ரிஸ்க் எடுத்து நடிக்கும் கலைஞனாகத் திகழ்கிறார் விக்ரம்.

ஸ்ரீதரின் அறிமுகம்.. .
எம்பிஏ படிக்கும்போதே டிவிஎஸ் விளம்பரங்களில் தலை காட்டி வந்த விக்ரமை 1990-ல் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர். படத்தின் பெயர் தந்துவிட்டேன் என்னை. ஜோடி ரோகிணி. அதே நேரத்தில் என் காதல் கண்மணி என்ற படத்திலும் நடித்தார்.

மீரா
பின்னர் பிசி ஸ்ரீராமின் இயக்கத்தில் மீரா, எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் காவல் கீதம், விக்ரம் இயக்கிய புதிய மன்னர்கள் போன்ற படங்களில் நடித்தார். எதுவும் சரியாகப் போகவில்லை. சில மலையாளப் படங்கள், தெலுங்குப் படங்களிலும் நடித்தார். டெலி பிலிம்களிலும் தலைகாட்டினார்.

சேது
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எந்தப் படமும் கைகொடுக்காத நிலையில் பாலாவின் சேது படத்தில் நடித்தார். அசாத்தியமான உழைப்பை அவர் இந்தப் படத்தில் கொட்டினாலும், படம் வெளியாவதில் பெரிய சிக்கல் இருந்தது. சில ஆண்டு இழுத்தடிப்புக்குப் பிறகு வெளியான அந்தப் படம்தான் விக்ரமை புதிதாய் அடையாளம் காட்டியது. அதுவே அவரது விலாசமாகவும் அமைந்தது.

கடின உழைப்பு
முன்பெல்லாம் கமல் மாதிரி யாராலும் ரிஸ்க் எடுக்க முடியாது என்பார்கள். அதை மாற்றி சொல்ல வைத்தவர் விக்ரம். எலும்பும் தோலுமாக மெலியணுமா... அல்லது பீமாவாக அவதாரம் எடுக்கணுமா.. எதற்கும் தயாராக நிற்பவர் விக்ரம்.

ஷங்கர் படத்துக்காக
இந்த 47 வயதிலும், கல்லூரி செல்லும் ஒரு மாணவனைப் போல மெலிந்து காட்டியிருக்கிறார் விக்ரம். சட்டென்று பார்த்தால் இது விக்ரம்தானா என கேட்க வைக்கும் அளவுக்கு அநியாயத்துக்கு மெலிந்திருக்கிறார் விக்ரம், ஷங்கர் படத்துக்காக.

பிறந்த நாள்
சினிமாவில் எந்த பெரிய பின்னணியும், சிபாரிசும் இல்லாமல் ஜெயித்தவர் விக்ரம். உழைப்பு, அடக்கம் போன்றவற்றுக்கு உதாரணமாகத் திகழும் விக்ரம் இன்று தன் பிறந்த நாளை ஷங்கரின் ஐ பட செட்டில் கொண்டாடுகிறார்.


Click it and Unblock the Notifications











