'ஆல் இன் ஆல் அழகுராஜா' கவுண்டமணிக்கு இன்று பிறந்த நாள்!
காமெடி கிங் என்று வயசு வித்தியாசமில்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் கவுண்டமணிக்கு இன்று பிறந்த நாள்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், கவுண்டமணிக்கு நிகரான புகழ், ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடையாது.
காமெடியில் கவுண்டமணி அறிமுகப்படுத்திய நக்கல் நய்யாண்டி பாணிதான் இன்று வரை பலராலும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் அவர் ட்ரெண்ட் செட்டர் எனலாம்.

கவுன்ட்டர் மணி
கோவை அருகே உள்ள வளகுண்டபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கவுண்டர். உண்மையான பெயர் சுப்பிரமணி. ஆனால் நடிப்பில் எதிராளிக்கு அடிக்கு கவுன்ட்டர் கொடுப்பது போல இவர் பேசியதால் 'கவுன்ட்டர் மணி' என அழைக்கப்பட்டார். பின்னர் அதுவே கவுண்டமணி ஆகிவிட்டது. கோவையைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் பெரும்பான்மை சமூகத்தவர் போலிருக்கிறது என நினைத்து பலரும் கவுண்டர் என்று குறிப்பிட ஆரம்பித்தனர்.

16 வயதினிலே
கவுண்டர் முதலில் நடித்தது 16 வயதினிலே படம்தான். ரஜினிக்கு எடுபிடியாக, டீக்கடைகாரராகத் தோன்றியிருப்பார் கவுண்டர். அதில் இவர் பேசிய பத்தவச்சிட்டியே பரட்டை என்ற டயலாக், ரஜினியின் இது எப்டி இருக்கு? என்ற பஞ்ச் வசனத்துக்கு இணையாக பேசப்பட்டது.

வில்லன்
பாரதிராஜா - பாக்யராஜ் இணைந்த புதிய வார்ப்புகள் படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார் கவுண்டமணி. தொடர்ந்து பாக்யராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லா சித்திரங்களிலும் கவுண்டமணிக்கு முக்கிய வேடம் தந்திருப்பார்.

எண்பதுகளில்...
எண்பதுகளில் கவுண்டமணி ஏராளமான படங்களில் நடித்தார். அவரில்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு படங்கள். அவற்றில் படங்கள் பிரபலமாகாவிட்டாலும், அவர் காமெடி மட்டும் சூப்பர் ஹிட்டாகிவிடும்.

கவுண்டர் - செந்தில்
தமிழகத்தின் லாரல் - ஹார்டி என்று புகழப்பட்ட ஜோடி கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை ஜோடி. இருவரும் இணைந்த படங்களில் காமெடி அத்தனை சிறப்பாக அமைந்துவிடும்.

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன் படத்துக்குப் பிறகு கவுண்டமணிக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. அதற்கு முன்பு வரை கவுண்டர் காமெடி காதுகளைப் பதம் பார்க்கிறது என எழுதிவந்த விமர்சகர்களே கவுண்டமணியின் ரசிகர்களாகிவிட்டதுதான் அவர் சிறப்பு.

தொன்னூறுகளில்...
தொன்னூறுகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார் கவுண்டமணி. ஆனால் 2000 ஆண்டுக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். 2010-க்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. வாய்ப்புகள் ஏராளமாக வந்தும்கூட நடிக்க மறுத்து வந்தார்.

ஹீரோ
இப்போது 49ஓ, வாய்மை ஆகிய இரு படங்களில் நாயகனாக நடிக்கிறார். நாயகனாக நடிப்பது ஒன்றும் கவுண்டருக்குப் புதிதல்ல. ஏற்கெனவே பிறந்தேன் வளர்ந்தேன், ராஜா எங்க ராஜா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.
பின்னர் வந்த தேடினேன் வந்தது, ஆஹா என்னப் பொருத்தம், உள்ளத்தைக் கிள்ளாதே, மேட்டுக்குடி போன்ற படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ளார்.

பிறந்த நாள்
இன்று கவுண்டமணிக்கு பிறந்த நாள். எத்தனையாவது பிறந்த நாள் என்று சொல்வது கவுண்டமணிக்குப் பிடிக்காது. எனவே வயசை மறந்துவிட்டு, வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











