என்னது கார்த்தியின் சர்தார் 2 படத்தில் விஜய் பட இயக்குநரா?.. அட இது புது ட்விஸ்ட்டா இருக்கே ப்பா
சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியானது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. அடுத்ததாக வா வாத்யாரே படத்தில் நடித்திருக்கும் அவர் இப்போது சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். இதன் ஷூட்டிங் மும்முரமாக நடக்கும் சூழலில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.
வந்தியத்தேன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.
ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. கார்த்தியின் 25ஆவது படம் தோல்வியடைந்தது அவரது ரசிகர்களிடையே உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் எப்படியாவது வெற்றி பாதைக்கு திரும்பிவிட வேண்டும் என்று அவர் முனைப்பில் இருந்தார்.

மெய்யழகன்: அப்படி அவர் கடைசியாக அவரது நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் வெளியானது. அதனை 96 இயக்குநர் பிரேம் இயக்கியிருந்தார். அரவிந்த் சாமி, கார்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது. படத்தில் கார்த்தியின் வெகுளித்தனமான நடிப்பும், பிரேமின் அட்டகாசமான மேக்கிங்கும் படத்துக்கு பெரிய பலமாக இருந்தன. அதுமட்டுமின்றி கார்த்தியின் கதை தேர்வும் படத்துக்கு படம் மாறுவது பலரது கவனத்தையும் அவரது பக்கம் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படங்கள்: மெய்யழகன் படத்துக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி வா வாத்யாரே படத்தில் நடித்திருக்கிறார். அதனை கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. அதற்கு காரணம் கங்குவாவின் தோல்விதான் என்றும்; ஞானவேல் ராஜாவுக்கு அப்படத்தால் ஏகப்பட்ட நஷ்டம் உருவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் டாணாக்காரன் திரைப்பட இயக்குநர் தமிழரசன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.
சர்தார் 2: இதற்கிடையே மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்திலும் கமிட்டாகியிருக்கிறார் கார்த்தி. இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது. இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தில், தூள், கில்லி, குருவி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் இந்தப் படத்தில் வேலை செய்கிறாராம். அவரது ஐடியாக்களையும் சர்தார் 2 இயக்குநர் மித்ரன் கேட்டுவருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications