சுதா கொங்கரா - சிம்பு இணையும் படம்.. எஸ்டிஆரால் தேதிகள் ஒதுக்க முடியவில்லையா?
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கமலின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்கவும் கமிட்டானார். ஆனால் அந்தப் படத்தின் அறிவிப்போடு சரி; அடுத்த அப்டேட்டுகள் எதுவுமே வரவில்லை. இந்தச் சூழலில் சிம்புவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். வரிசையாக பல படங்களில் நடித்த அவருக்கு ஏகப்பட்ட ஹிட் படங்களாக அமைந்தன. முக்கியமாக திறமை வாய்ந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றார். அதேசமயம் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என்ற சர்ச்சைகளும் அவரை சுற்றின. மேலும் சில காதல் தோல்விகளும் நடந்தன. சூழல் இப்படி இருக்க திடீரென அவர் ஆன்மீக வழியில் சென்றார். சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். இதன் காரணமாக சிம்புவின் கரியர் அவ்வளவுதான் என்று பலர் பேசினார்கள்.

மாஸ் ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க தனது உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் மாநாடும், வெந்து தணிந்தது காடும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சிம்புவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். இதன் காரணமாக சிம்பு பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்து கொண்டாடினார்கள்.
தக் லைஃப்: வரிசையாக மூன்று படங்களில் நடித்த சிம்பு இப்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் கமல், சிம்பு, அபிராமி, திரிஷா என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக கமலுடன் இணைந்து சிம்பு நடித்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அநேகமாக அடுத்த வருடம் பொங்கலுக்கு தக் லைஃப் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்டிஆர் 48: இதற்கிடையே கமலின் தயாரிப்பில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. அதனை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்தவர் தேசிங்கு. எனவே அவருடன் சிம்பு கூட்டணி வைத்திருப்பதால் படத்தின் மீதான ஆவல் அதிகரித்தது. படத்தின் அறிவிப்பு வந்ததோடு மட்டும் இருக்கிறது. சிம்புவோ இந்தப் படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக்கொண்டார்.
அஸ்வத் மாரிமுத்து: விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 49ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் சிம்புவின் 50ஆவது படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருக்கிறது.
சுதா கொங்கரா: அதன்படி அந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருக்கிறார். அதாவது எழுத்தாளர் நரன் எழுதிய வேட்டை நாய்கள் புத்தகத்தை சுதா சினிமாவாக எடுக்கப்போகிறார். அதில் சிம்பு நடித்தால்தான் சரியாக இருக்கும் எழுத்தாளர் நரனும், சுதாவும் நினைப்பதாகவும்; அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி சிம்புவும் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது புதிய சிக்கலாக சிம்புவுக்கு வரிசையாக கைவசம் படங்கள் இருப்பதால் இந்தப் படத்துக்கு தேதியை ஒதுக்க முடியாமல் திணறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











