சிவகார்த்திகேயனின் கரியரில் முதல்முறையாம்.. முருகதாஸ் படத்தில் ஏற்றிருக்கும் கேரக்டர் இதுவா?
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கும், முருகதாஸுக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. 2K கிட்ஸ் தலைமுறையினர் அவரை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அதன் காரணமாக 90ஸ் கிட்ஸுக்கு எப்படி விஜய் ஒரு கொண்டாட்டத்துக்குரிய ஹீரோக்களில் ஒருவராக இருந்தாரோ அதேபோல் 2K கிட்ஸுக்கு சிவகார்த்திகேயன் திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் திரைத்துறையில் பெரும்பாலானவர்களின் பேச்சு.

அமரன்: வரிசையாக இரண்டு படங்கள் மெகா ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் பலத்த அடி வாங்கினார். அடுத்ததாக வெளியான மாவீரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. முக்கியமாக சிவகார்த்திகேயனின் நடிப்பும் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க; கமல் ஹாசன் படத்தை தயாரித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ்: இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டானார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முருகதாஸ் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார். எனவே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தால் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்கிறார் முருகதாஸ்.
விறுவிறு ஷூட்டிங்: ஏ.ஆர்.முருகதாஸ் ஷூட்டிங்கை புயல் வேகத்தில் நடத்திவருகிறார். ஏனெனில் அடுத்ததாக அவர் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதால் சிவகார்த்திகேயன் படத்தை இன்னும் சில வாரங்களில் முடிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் கேரக்டர்: இந்நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் இதில் மனநலம் குன்றிய கேரக்டரில் நடிப்பதாகவும்; அதற்காகத்தான் அவர் தாடியை அதிகம் வளர்த்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் மனநலம் குன்றிய கேரக்டரை அவர் ஏற்கும்பட்சத்தில் இந்த மாதிரியான கேரக்டரில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











