விஜய் ஃபார்முலாவை பின்பற்றும் சிவகார்த்திகேயன்?.. இயக்குநருக்கு கண்டிஷன் வேறயா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.அப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் புதுச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தப் படத்துக்கு பிறகு குட் நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. இந்தச் சூழலில் அவர்கள் இருவரும் இணையவிருப்பதாக கூறப்படும் படம் பற்றிய புதிய பேச்சு ஒன்றும் எழுந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் படம்: அமரன் படத்தை முடித்திருக்கும் சிவா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதில் ருக்மினி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நேற்று புதுச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முருகதாஸுக்கு இந்தப் படம் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் அவர் இயக்கிய படங்கள் படுதோல்வியை சந்தித்திருக்கின்றன.
புதிய படம்: அமரன், ஏ.ஆர்.முருகதாஸுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது குட் நைட் படம் ஃபீல் குட் படமாக வெளியாகி ரசிகர்களின் அப்ளாஸை அள்ளியது அனைவரும் அறிந்ததே. சிவகார்த்திகேயன் விநாயக்கிடம் தனக்கு எழுதும் கதை ஃபீல் குட்டாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதில் பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி கதை எழுத கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் ஃபார்முலா: இதற்கிடையே விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கப்போகிறார். இதனையடுத்து அவர் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று ஒருதரப்பினர் ஆரூடம் கூறிவருகின்றனர். நிலைமை இப்படி இருக்க தனக்கான கதையில் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் இருக்க வேண்டுமென அவர் கண்டிஷன் போட்டிருப்பதாக வந்த தகவலை கேள்விப்பட்ட சிலர்; அப்படியே விஜய் ஃபார்முலாவை பின்பற்றுகிறாரே. அவரும் சிறுவர்கள், சிறுமிகள், குடும்ப ரசிகர்களை பிடிக்க தேவையான எலிமெண்ட்டுகளை சேர்க்க சொல்வார். அதுபோல் சிவாவும் வந்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.
முன்னதாக சென்னை போரூரில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அதனை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு மூவும் விஜய் அமர்ந்திருந்த நாற்காலியை நோக்கியதாகவே இருக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











