மகா நடிகன் FAFA..பான் இந்தியா ஸ்டாராக ஃபகத் பாசில் கொண்டாடப்பட என்ன காரணம்?
திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் பகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். ஃபாசில் இயக்கத்தில் கையெத்தும் தூரத் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம்வருகிறார். தயாரிப்பாளராகவும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் ஃபகத் பாசில்.
இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார். ஆனால் கண்கள், உடல் மொழி என அனைத்திலும் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்துவருகிறார்கள். ஆனால் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.இதன் காரணமாக மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

மோகன் லாலுக்கு அடுத்து: இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன் லால். அவருக்கென்று தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் எக்கச்சக்க பேர் இருக்கிறார்கள். மோகன் லால் தமிழில் இருவர் படத்தில் நடித்தார். அதில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தாலும் படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. அதேபோல் மம்மூட்டியும் தமிழில் தளபதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மோகன் லால், மம்மூட்டியைவிடவும் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் மலையாள நடிகர் என்றால் அவர் ஃபகத் பாசில்தான்.
காரணம் என்ன: அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஃபகத்தின் அலட்டல் இல்லாத நடிப்பு. மோகன் லால், மம்மூட்டி ஆகியோரிடமும் அது இருந்தாலும் அவர்களைவிடவும் ஃபகத்தை தமிழ்நாட்டில் ஒருபடி மேலே ரசிக்கிறார்கள். உதாரணமாக அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான மாமன்னன் படத்தை எடுத்துக்கொண்டால் புரிந்துகொள்ளலாம். அந்தப் படத்தின் இடைவேளை காட்சியில் ஃபகத்தின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கும். முக்கியமாக வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.
இதற்கு முன்னதாக தமிழில் அவர் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அந்தப் படங்களில் நடித்தபோதே அவர் பிரபலம்தான். ஆனாலும் மாமன்னன் படம் தமிழில் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்துவிட்டது. குறிப்பாக அந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்கள் முழுக்க ஃபகத் பாசிலே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுகூட அவர் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அவர் என்ன மாதிரியான அதகளம் செய்யப்போகிறார் என்பதுதான் ஆவலாக இருக்கிறது.
மகா நடிகன்: ஒரு நடிகருக்கு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாற வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் அப்படி மாறும்போது அவர் நடிப்பது தெரியக்கூடாது. அந்த இடத்தில் பலர் கோட்டைவிட்டுவிடுவார்கள். ஆனால் ஃபகத் அப்படி இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர் நடிக்கிறார் என்றே பிறரால் உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் ஃபகத். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஆவேஷம் படத்தை பார்த்து பிரமிக்காதவர்களே இல்லை. ஒரு கேங்ஸ்டராக மாறி பயமுறுத்தவும், சிரிக்கவும், ரசிக்கவும் வைக்க அவரால் மட்டும்தான் முடிந்தது.
அதேபோல் தொண்டிமுதலும் படத்தில் திருடனாக அவர் நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் மிரண்டது. மேலும் ட்ரான்ஸ், கும்பலாங்கி நைட்ஸ் ஆகிய படங்களில் தான் ஏற்றிருந்த கதாபாத்திரமாக அவர் மாறியதை பார்த்து நடிப்பு பேய் ஏதும் ஃபகத்துக்குள் நுழைந்துவிடுமோ என்றுதான் பலரும் பேசினார்கள் என்பது உண்மை. கும்பலாங்கி நைட்ஸ் க்ளைமேக்ஸில் வசனங்களை பெரிதாக பேசாமல் தனது பார்வை, உடல் பாவனையை வைத்தே மிரட்டியிருப்பார் ஃபகத். ஃபகத்துக்கு என்று தனி ஸ்டைல் ஒன்று இருக்கிறது. அவரது சிரிப்பு, நடை, பாவனை என அனைத்திலும் ஒரு அளவெடுத்த அழகு இருக்கும். அது பலரையும் கவர்வதற்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.
சீனியர் இயக்குநருடன்: மலையாள திரையுலகில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சத்தியன் அந்திக்காடு. அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் தவித்துக்கொண்டிருந்த சூழலில் தற்கால நடிகர்களில் அவர் இணைய விரும்பியது ஃபகத் பாசிலுடன். ஃபகத்தை வைத்து சத்தியன் 'ஒரு இந்தியன் பிரணாய கத', 'Njan Prakashan' ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். இரண்டு படங்களும் ஓரளவுதான் வரவேற்பை பெற்றன என்றாலும் சத்தியன் இயக்கத்தில் ஃபகத் பாசில் தனது நடிப்பை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருந்தார். பலரும் அவரை பார்த்து பிரமித்தார்கள்.
தயாரிப்பாளர் ஃபகத் பாசில்: ஒருவர் நடிகராக வென்றுவிட்டால் அதிலேயே தனது காலத்தை கழித்துக்கொள்ளத்தான் விரும்புவார். அரிதிலும் அரிதாக சிலர்தான் படம் தயாரிக்க முன்வருவார்கள். அப்படியே தயாரித்தாலும் பெரும்பாலானோர் தனது கையை கடிக்காத கமர்ஷியல் கதைகளை படமாக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் ஃபகத் பாசிலோ தனது தயாரிப்பிலும் வித்தியாசத்தையும், தனித்துவத்தையும் காண்பிப்பவர். அவர் இதுவரை தயாரித்திருக்கும் வரதன் (நஸ்ரியா பெயரில் தயாரிக்கப்பட்டது), ஜோஜி, தங்கம், பல்து ஜன்வர் உள்ளிட்ட படங்களில் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கும்.
நஸ்ரியாவுடன் திருமணம்: ஃபகத் பாசில் எப்படி சிறப்பாக நடிக்கிறாரோ அதேபோல் அவர் திருமணம் செய்துகொண்ட நஸ்ரியாவும் சிறந்த நடிகைதான். இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவரது திருமண வாழ்க்கையும் சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது மேலும் நஸ்ரியாவும் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அந்தப் படத்தால் தனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஓபன் ஸ்டேட்மெண்ட்டே கொடுத்தார் ஃபகத். பான் இந்தியா அளவில் வெற்றி பெற்ற படத்தில் நடித்திருக்கிறோம்; அது போதும் என்று அதை நினைத்து மட்டும் திருப்திப்பட்டுக்கொள்ளாமல் தனது கேரக்டர். தனது நடிப்பை எப்படி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வது, எப்படி மெருகேற்றுவது என்று சதா யோசித்துக்கொண்டிருக்கும் வெகுசில சிறந்த நடிகர்களில் ஒருவர் ஃபகத் பாசில்.
அதனால்தான் அவர் பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார். நிச்சயம் இனி வரும் காலங்களில் ஃபகத்தின் தாக்கம் இந்திய சினிமாவில் பிரதிபலித்து அவர்போல் நடிக்க வேண்டும் என்று மற்ற நடிகர்களை யோசிக்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதுதான் திரைத்துறையில் பெரும்பாலானோரின் கருத்து.


Click it and Unblock the Notifications











