சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணையும் படம் என்னதான் ஆச்சு?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அதுகுறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்தச் சூழலில் இரண்டு பேரும் இணையும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. 2K கிட்ஸ் தலைமுறையினர் அவரை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அதன் காரணமாக 90ஸ் கிட்ஸுக்கு எப்படி விஜய் ஒரு கொண்டாட்டத்துக்குரிய ஹீரோக்களில் ஒருவராக இருந்தாரோ அதேபோல் 2K கிட்ஸுக்கு சிவகார்த்திகேயன் திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் திரைத்துறையில் பெரும்பாலானவர்களின் பேச்சு.

அமரன்: வரிசையாக இரண்டு படங்கள் மெகா ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் பலத்த அடி வாங்கினார். அடுத்ததாக வெளியான மாவீரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. முக்கியமாக சிவகார்த்திகேயனின் நடிப்பும் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க; கமல் ஹாசன் படத்தை தயாரித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ்: இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டானார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முருகதாஸ் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார். எனவே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தால் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்கிறார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சல்மான் கானை வைத்து இயக்கவிருப்பதால் சிவாவின் படத்தை விரைவில் முடிக்கும் நோக்கில் ஷூட்டிங்கை துரிதப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
வெங்கட் பிரபுவுடன் கூட்டணி: இதற்கிடையே அமரன் படத்துக்கு முன்னதாகவே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அதுகுறித்து இரண்டு பேரும் ட்விட்டரில் உரையாடிக்கொண்டதும் சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டானது. ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அதற்கு காரணம் விஜய்யின் GOAT. ஏற்கனவே சொன்ன கதையை விஜய் டிக் அடித்ததால் சிவகார்த்திகேயன் படத்துக்கு முன்னதாக GOAT படத்தை இயக்க சென்றுவிட்டார் வெங்கட் பிரபு.
இறுதிக்கட்ட ஷூட்டிங்: GOAT படத்தின் ஷூட்டிங் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ரஷ்யாவில் நடந்துவருவதுதான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்று தெரிகிறது. படமும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணையும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
எஸ்கே - வெங்கட் பிரபு பட அப்டேட்: அதாவது இந்தப் படத்துக்கும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம். அதேபோல் படத்தின் ஷூட்டிங்கை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும்; அடுத்த வருட தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் வெங்கட் இருப்பதாகவும்; படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











