விடாமுயற்சி முதல் விமர்சனம் இதுவா?.. படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் அந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் அஜித்தும் தனது டப்பிங் போர்ஷனை முடித்துவிட்டார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தச் சூழலில் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் அவர். கடந்த வருடம் படத்தின் அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங்கும் தொடங்கியது. ஆனால் ஷூட்டிங்கில் ஏகப்பட்ட பிரச்னைகள் என்று தகவல்கள் வந்துகொண்டிருந்தன. முக்கியமாக லைகா நிறுவனத்துக்கு பண நெருக்கடி; அதன் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் என்றெல்லாம் தகவல்கள் பரவின.

விறுவிறு ஷூட்டிங்: ஆனால் படத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று படத்தில் பணியாற்றியவர்கள் தொடர்ந்து கூறினார்கள். அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் அஜர்பைஜான், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் கார் ஓட்டும்போது ஏற்பட்ட விபத்து தொடர்பான் வீடியோ ஒன்றும் ட்ரெண்டானது. இதில் அஜித்துடன் ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டீசர் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. அது கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் அஜித்தின் ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். இதற்கிடையே பிரேக் டவுன் என்ற படத்தின் காப்பிதான் இந்த விடாமுயற்சி என்றும்; அதற்காக 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்திடம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
டப்பிங் ஓவர்; படம் எப்படி இருக்கு: அதேபோல் அஜித்தும் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்திருக்கிறார். மேலும் படத்தின் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதன்படி இயக்குநருக்கு நெருக்கமானவர்கள் படத்தை பார்த்துவிட்டார்கள் என்றும்; அவர்கள் படம் கண்டிப்பாக மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என்று சொல்லுவதாகவும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
க.. அஜித்தே: முன்னதாக அஜித்குமாரை கடவுளோடு ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் கோஷம் எழுப்பினார்கள். எனவே அஜித் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "க... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











