Gemini Ganesan - இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்.. மனம் திறந்த ஜெமினி கணேசன் - சாவித்திரி மகன்
புதுக்கோட்டையில் பிறந்தவர் ஜெமினி கணேசன். கணபதி சுப்ரமணியன் சர்மா என்ற இயற்பெயரை கொண்ட அவர் பின் நாட்களில் ராமசாமி கணேசன் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். அடிப்படையில் வேதியியல் படித்த அவர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியராக இருந்தாலும் அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்துவந்தது.
ஜெமினி: கலை மீது ஆர்வம் கொண்டாலும் எப்படி திரையுலகில் நுழைவது என்று தெரியாமல் இருந்தவர் ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். பிறகு மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கணேசன் என்ற பெயரில் அவர் அறிமுகமானாலும் பராசக்தி மூலம் பிரபலமான சிவாஜியும் கணேசன் என்று அழைக்கப்பட்டதால் தான் பணியாற்றிய ஜெமினி ஸ்டூடியோவின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னர் சேர்த்து ஜெமினி கணேசனாக மாறினார்.

ஹீரோ ஜெமினி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான ஜெமினி கணேசன் பெண் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்படி மனம்போல மாங்கல்யம், வஞ்சிக்கோட்டை வாலிபன் நான் அவனில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர்; நான் அவனில்லை படத்தில் மட்டும் ஒன்பது ரோல்களில் நடித்து அனைவரையும் அசத்தினார்.
அந்தக் கால விஜய் சேதுபதி: தற்போது விஜய் சேதுபதி எப்படி ஹீரோவாக இருந்தாலும் இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது, வில்லனாக நடிப்பது என கலக்கிவருகிறாரோ அதேபோல்தான் ஜெமினி கணேசனும். தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார். அது ஒருபக்கம் அவருக்கு பலமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பலவீனமாக இருந்தது.
காதல் மன்னன்: சிவாஜியை நடிகர் திலகம், எம்ஜிஆரை புரட்சி தலைவர் என்று பலரும் அழைக்க கோலிவுட்டில் முதல் காதல் மன்னனாக ஜெமினி கணேசன் மாறினார். அவரது உருவம், ஹேர் ஸ்டைல் என அனைத்துமே பெண்களை கவர்ந்தன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் முதல் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவித்திரியுடன் திருமணம்: ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருந்தனர். அந்த சமயத்தில்தான் மனம் போல மாங்கல்யம் படத்தில் சாவித்திரியுடன் நடித்தார். முதல் படத்திலேயே இருவருக்குமான பழக்கம் காதலாக மாறியது. அதுமட்டுமின்றி திருமணமும் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
மகன் பேட்டி: இந்நிலையில் ஜெமினி கணேசன் - சாவித்திரிக்கு பிறந்த மகன் சதீஷ் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "படிப்புக்காக நான் பெங்களூர் சென்றபோது எனது பிரிவை தாங்க முடியாதவர்தான் எனது அப்பா. நான் ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அவரது ஆச்சாரமான குடும்பம் என்னை அங்கீகரித்துக்கொண்டார்கள். அந்த வீட்டில் இருந்தபோது எனக்கு எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. நான் இந்த சினிமா உலகை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கமல், நம்பியார், நாகேஷ் என பலரது வீட்டுக்கு என்னை அழைத்து செல்வார் அப்பா. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கு மகனாக பிறக்க வேண்ட்ம் என்பதே எனது ஆசை" என்றார்.


Click it and Unblock the Notifications











