“அந்த ஒரு பேரை மட்டும் சொல்லவே மாட்டேன்”.. சர்ச்சைக்குப் பயந்து ரொம்பவே உஷாராக பேசிய விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதியின் சிந்துபாத் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Recommended Video
சென்னை: சிந்துபாத் படக்கதை யாருடையது என நான் கூறினால் நிச்சயம் அது சர்ச்சையாகி விடும் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ஆக்ஷன், திரில்லராக உருவாகியுள்ள படம் 'சிந்துபாத்'. இப்படம் மூலம் மூன்றாவது முறையாக அருண்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அஞ்சலி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை, கே.புரொடக்ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவில் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "நெஞ்சே உனக்காக" பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் அருண்:
அப்போது பேசிய விஜய் சேதுபதி, "பண்ணையாரும் பத்மினியும் படத்தில் தான் நானும், இப்பட இயக்குநர் அருண்குமாரும் அறிமுகமானோம். அதன்பிறகு நாங்கள் இருவரும் நல்ல நெருக்கமான நண்பர்கள் ஆகிவிட்டோம். என்னுடன் படம் பண்ணுவது அருணுக்கு சௌகரியமான விசயம்.

சிந்துபாத்:
ஆனால், தொடர்ந்து என்னுடனேயே இருந்தால் சோம்பேறியாகி விடுவான் என்பதால், வேறு நடிகர்களையும் வைத்து படம் பண்ணச் சொன்னேன். அருணை யாரும் நம்பாததால், நானே மீண்டும் அவரது சேதுபதி படத்தில் நடித்தேன். அதன்பிறகும் வேறு நடிகர்களை வைத்து படம் பண்ண அறிவுறுத்தினேன். நானும் அருணுக்காக சிலரிடம் பேசினேன். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. எனவே தான் மீண்டும் சிந்துபாத்தில் நாங்கள் இணைந்திருக்கிறோம்.

சர்ச்சைப் பெயர்:
ஹீரோவின் மனைவியை வில்லன் கடத்திச் சென்று விடுகிறார். அவரை கடல் கடந்து போய் மீண்டும் ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. இந்தப் படத்தின் கதை மிகவும் பழமையானது. யாருடைய கதை என நான் பேரைக் குறிப்பிட்டால், அது நிச்சயம் சர்ச்சையாகி விடும். எனவே அந்த ஒரு பேரை மட்டும் நான் சொல்லவே மாட்டேன்.

மகன் சூர்யா:
இப்படத்தில் நான் நடிக்காமல் வேறு நடிகர்கள் நடித்திருந்தாலும் கூட, என் மகன் சூர்யா இதில் நிச்சயம் நடித்திருப்பான். அருண் அப்படித்தான் கதை என்னிடம் கூறினார். அதேபோல் தான் அஞ்சலியும். அவரை விட்டால் இந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடித்திருக்க முடியாது. எனக்கு இப்படத்தில் சரிவர காது கேட்காது. அதனால் நாயகி கத்திக் கத்திப் பேச வேண்டும். அதற்கு அஞ்சலி தான் சரியான தேர்வு.

யுவனின் இசை:
அதேபோல் வில்லன் லிங்காவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒருநாள் என்னைத் தூக்கி சாப்பிட்டு விடுவார் பாருங்கள். யுவனின் இசை மிகவும் நெருக்கமாக உணர வைக்கும். நம்முடைய இசை என்ற உணர்வைத் தரும். இளையராஜாவின் பாடல்களைப் போன்றே இவரது நெருக்கத்தை தருகிறது. இப்படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











