விஸ்வரூபம் பிரச்சனை தொடர்ந்திருந்தால் பெங்களூரில் குடியேறியிருந்திருப்பேன்: கமல்
பெங்களூர்: விஸ்வரூபம் பிரச்சனை தொடர்ந்திருந்தால் நான் பெங்களுரில் குடியேறி இருந்திருப்பேன் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி பிரச்சனைகள் எல்லாம் ஒரு வழியாகத் தீர்ந்து கடந்த 7ம் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல பிரச்சனைகளைத் தாண்டி வந்த விஸ்வரூபத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் கமல் ஹாசன் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள ரேணுகாம்பா தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நேற்று விஸ்வரூபம் படம் பார்த்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கர்நாடகத்திற்கும், எனக்கும் நீண்ட கால தொடர்பு
விஸ்வரூபம் கர்நாடகத்தில் ரிலீஸாக ஒத்துழைப்பு கொடுத்த மாநில அரசு மற்றும் காவல் துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகத்தில் விஸ்வரூபம் வெற்றிகரமாக ஓடுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. கர்நாடகத்திற்கும் எனக்கும் நீண்ட காலமாக தொடர்பு உண்டு. நடிகர் அம்பரீஷ் எனது நண்பர்.

ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது உண்மையே
நான் மதச்சார்பற்றவன். எனக்கு அரசியல் தெரியாது. அதனால் எனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். தமிழகத்தில் விஸ்வரூபத்திற்கு தடைவிதிக்கப்பட்டதால் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை படத்தைப் பார்ப்பதன் மூலம் தமிழக மக்களும், ரசிகர்களும் எனக்கு கொடுத்துவிடுவார்கள்.

பெங்களூரில் குடியேறி இருந்திருப்பேன்
இந்த பட பிரச்சனையால் தமிழகத்தைவிட்டு வெளியேற நினைத்தேன். அப்போது பெங்களூருக்கு வந்துவிடுமாறு அழைப்பு விடுத்த மக்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அப்படி நான் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டி இருந்திருந்தால் நான் பெங்களுருக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருந்தது. பெங்களூரில் குடியேற எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

எனக்கு பிரச்சனைனா ரஜினி குரல் கொடுப்பார்
ரஜினியும் நானும் ஒரே கலை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு எப்பொழுது பிரச்சனை என்றாலும் அவர் தான் முதலில் குரல் கொடுப்பார். அதே போன்று விஸ்வரூபம் பிரச்சனையிலும் குரல் கொடுத்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











