ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு.. அமீர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை!
சென்னை: இயக்குநரும், நடிகருமான அமீர் வீட்டு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜாபர் சாதிக் தயாரித்த 'இறைவன் மிகப்பெரியவன்'படத்தில் அமீர் நடித்த நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் 75 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும், போலீஸாரும் பறிமுதல் செய்தனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பல கட்டங்களாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
ஜாபர் சாதிக் : அதில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக இருப்பது சினிமா தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜாஃபர் சாதிக்கை பிடித்த திட்டமிட்ட நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின், ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த ஜாஃபர் சாதிக்கை போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் போதை பொருள் கடத்தலில் மூளையாக இருந்தது தெரியவந்தது.

10 இடத்தில் சோதனை: மேலும், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த அதிகமான பணத்தைத் திரைப்படம் தயாரிப்பது, ரியல் எஸ்டேட் துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக அமலாத்துறையினர் தெரிவித்தனர். நடிகை ஆனந்தி நடித்த 'மங்கை' படமும், இயக்குநர் அமீர் இயக்கி நடித்த 'இறைவன் மிகப்பெரியவன்' படமும் போதை பொருள் கடத்தல் பணத்தில் தயாரிக்கப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம் சாட்டியதை அடுத்து, இயக்குநர் அமீருக்கு 2024 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டு டெல்லியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அமீர் வீட்டில் சோதனை: இந்நிலையில், இன்று காலையில் இருந்து ஜாஃபர் சாதிக்கிற்கு சொந்தமான இடம் மற்றும் தொடர்பில் இருந்த நபர்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில், தியாகராஜ நகரில் இருக்கும் இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால், அமீர் படப்பிடிப்பில் இருப்பதால், 12 மணி அளவில் அவர்கள் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











