நான்குனேரி கோயிலுக்குள் சட்டை அணிந்து சென்ற கமல்ஹாசன்.. பக்தர்கள் கண்டனம்!
வள்ளியூர்: நான்குனேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில் படப்பிடிப்புக்காக வந்த நடிகர் கமலஹாசன் சட்டை அணிந்து கோயிலுக்குள் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நான்குனேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயில் பாரம்பரியமிக்க கோயிலாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் ஆழ்வார்களால் பாடப்பட்ட இத் திருத்தலத்தினுள் ஆண்கள் சட்டை அணிந்து செல்லவும் காலணிகள் (செருப்பு) அணிந்து செல்லவும் அனுமதிப்பதில்லை. இதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் பாபநாசம் திரைப்பட படப்பிடிப்பு நான்குனேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில் ஆக. 30 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். ஆனால் படபிடிப்புக் குழுவினர் கோயில் மண்டபத்தில் காலில் செருப்பு அணிந்தும் சட்டை அணிந்தும் நின்று வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தவிர படப்பிடிப்புக்கு வந்த நடிகர் கமலஹாசன் சட்டை அணிந்து கோயிலுக்குள் சென்றாராம். கோயிலுக்குள் மண்டபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு காட்சியிலும் சட்டை அணிந்து கலந்து கொண்டாராம். இதை கோயில் ஊழியர்களும், நிர்வாகிகளும் கண்டுகொள்ளவில்லை என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற இத் திருத்தலத்தின் பாரம்பரியக் கட்டுப்பாட்டை மீறி சட்டை அணிந்து சென்ற நிகழ்ச்சி பக்தர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிர்வாகத்தினருக்கும் படப்பிடிப்பு குழுவினருக்கும் பெருமாள் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோயிலுக்குள் நடைபெற்ற படப்பிடிப்பையும், உள்ளே சட்டை அணிந்து சென்ற கமலஹாசனையும் படம்பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும் செய்தியாளர்களை அங்குள்ளவர்கள் அனுமதிக்கவில்லை. இப் பிரச்னை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











