'க்' சேர்த்தால் பிரச்சனை முடிந்ததா?..கழகத்தின் தலைவர் விஜய்யின் முடிவு என்ன?
சென்னை: விஜய் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து அதை, பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவோம் என்று கூறியிருக்கிறார். மேலும், விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், இதுகுறித்து விஜய் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு, இயக்கம் சார்பில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டி, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், விஜய் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், கட்சித் தலைவராக அவரே செயல்படுவார் என்றும் தகவல் வெளியானது.

கட்சி தொடங்கினார்: இதையடுத்து பிப்ரவரி 2ந் தேதி இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சி பெயர் தமிழக வெற்றி கழகம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கட்சியின் தலைவர் என்ற முறையில் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். என்னால் முடிந்த வரை, தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பது எனது நீண்டகால எண்ணம். எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படியே, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் எனது தலைமையில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சினிமாவை விட்டு விலகுவேன்: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, வரும் மக்களவை தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான, எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நமது அரசியல் பயணம் தொடங்கும் என்றும், முழு அரசியலில் ஈடுபட்ட பிறகு சினிமாவில் இருந்து விலகுவேன் என்று அறிவித்து இருந்தார்.
இலக்கணப்பிழை: விஜய் அரசியலுக்கு வந்தது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறுபக்கம் குற்றச்சாட்டுகளும் கேலிகளும் வருகிறது. கட்சியின் பெயரில் பிழை இருப்பதைச் சுட்டிக் காட்டி ஒரு தரப்பினர் கேலி செய்து வருகின்றனர். அதாவது,விஜய்யின் கட்சிப் பெயரில் வெற்றி எனும் வார்தைக்கு அருகில் ' க் ' இல்லாமல் போனது எழுத்துப் பிழை. இதனை நெட்டிசன்கள் முதல் நாளில் இருந்தே இணையத்தில் பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
விஜய்யின் முடிவு: இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு 'க்' வருமா வராதா விமர்சனங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டு இருப்பதால், அதை ஏற்றுக்கொள்ளும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் பெயரில் 'க்' என்ற எழுத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய நாளில் இருந்து இலக்கண பிழை இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு இதன் மூலம் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











