அரசியலுக்கு வர பயமில்லை.. ஆழத்தை நினைத்துதான் தயக்கம்: "லிங்கா" விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
சென்னை: படம் பண்றது ஈஸிங்க, அரசியல் போறது ஈஸிங்க, ஆனால் வெற்றி கொடுக்கணும்ல என்று லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள லிங்கா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில் ஏராளமான திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொள்ள ரஜினி வந்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
விழாவில் பேசிய ரஜினி கூறுகையில்,

எனக்கே
அமீர், சேரன், வைரமுத்து, விஜயகுமார் ஆகியோர் அரசியல் பற்றி பேசினார்கள். ரஜினியோடு நெருங்கிப் பழகியும் அவரைப்பற்றி எனக்கே சரியாக தெரியாது என்றார் வைரமுத்து. எனக்கே என்னை பற்றி தெரியாது. சூழ்நிலை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது.

அரசியல்
அரசியல் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும். அதன் ஆழம், ஆபத்து பற்றி தெரியும். யார் யாரின் தோளை மிதித்து அங்கு செல்ல வேண்டும் என தெரியும்.

சந்தேகம்
இத்தனை பாடுபட்டு அரசியலுக்கு சென்றால் அங்கு நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்று சந்தேகமாக உள்ளது. அரசியலை நினைத்து பயப்படவில்லை அதன் ஆழத்தை நினைத்தே தயங்கிக் கொண்டிருக்கிறேன்.

அவசியம்
பலர் அரசியல் பற்றி பேசியதால் நானும் பேச வேண்டியதாகிவிட்டது. நான் பேசவில்லை என்றால் திமிர் என்றாகிவிடும்.

கடவுள்
எதுவாக இருந்தாலும் சரி அதை கடவுள் தான் முடிவு செய்வார். அது என்னவென்று எனக்கு தெரியாது. எதுவாக இருப்பினும் மக்களுக்கு நல்லதையே செய்வேன் என்றார் ரஜினி.


Click it and Unblock the Notifications











