மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் நாளை மீண்டும் ரெய்டு: அதிகாரிகள் முடிவு

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி காலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 80 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த சோதனைகளில் ரொக்கம், ஆவணங்கள், யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.
இதில் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இருந்து மட்டும் ரூ. 22 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனைகள் நடந்தபோது மம்முட்டி சென்னையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொச்சி சென்ற அவரிடம் வருமான வரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
அவரிடம் ரூ. 22 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படும் என்று மம்முட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் மம்முட்டிக்கு பெங்களூரில் ஒரு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டது.
இதற்கிடையே மோகன்லால் வீட்டில் சோதனை நடத்தியபோது அவர் ராமநாதபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தார். அவரது கொச்சி வீட்டில் இருந்து கலைப்பொருட்கள், யானைத் தந்தங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அவரது வீட்டில் ஒரு ரகசிய அறை உள்ளது. அதை மோகன்லால் வந்தால் மட்டுமே திறக்க முடியுமாம். அந்த அறையில் யானைத் தந்தங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த இருவரின் வீடுகள், அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள கணக்கும், அவர்கள் விசாரணையின்போது தெரிவித்ததும் முரண்பாடாக உள்ளது. அவர்கள் வீடுகளில் மேலும் பல முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் நாளை மீண்டும் மம்முட்டி, மோகன்லால் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மோகன்லாலிடம் நாளை சென்னையிலும், நாளை மறுநாள் கொச்சியிலும் விசாரணை நடக்கிறது. நாளை மறுநாள் நடக்கும் விசாரணையின்போது அவரது வீட்டில் உள்ள ரகசிய அறை திறக்கப்படும்.
இந்த சோதனைகள் குறித்து வருமான வரித்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஆர்.மோகன் கூறியதாவது,
நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் கைப்பற்றிய சொத்து ஆவணம் நகை, பணம் பற்றிய விவரங்களை மதிப்பீடு செய்து வருகிறோம். வரும் 27-ம் தேதி அதன் முழுவிவரங்களை வெளியிடுவோம் என்றார்.


Click it and Unblock the Notifications











