'பாக்சிங்' கற்பதற்குள் நாக்குத் தள்ளி விட்டது... ஜெயம் ரவி
சென்னை: கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படம் பூலோகம். இப்படத்தில் இவரது ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று இரவு சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோவில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அதன் விபரமாவது :-

டார்க் சாக்லேட் பாய்...
இதுவரை நான் நடித்த எந்த படத்திற்கும் கொடுக்காத உழைப்பை கடந்த 3 வருடங்களாக பூலோகம் படத்திற்காக கொடுத்திருக்கிறேன். வடசென்னை தமிழ் பேசி நடித்துள்ள என்னை இந்த படத்துக்காக டார்க் சாக்லேட் பாயாக மாற்றி விட்டார் டைரக்டர் கல்யாண் கிருஷ்ணன்.

நாக்குத் தள்ளி விட்டது...
கேள்வி: இந்த படத்துக்காக எத்தனை மாதங்கள் பாக்சிங் பயிற்சி எடுத்தீர்கள்?
பதில்: ஏற்கனவே எம்.குமரன் சப் ஆப் மகாலட்சுமி படத்திலேயே நான் பாக்சராக நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் பாக்சிங்கில் உள்ள 12 ரவுண்டுகளையும் திறம்பட பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். மதன் என்ற பாக்சர்தான் எனக்கு 2 மாதங்களாக முறையான பயிற்சி கொடுத்தார். ஆனால் இரண்டு ரவுண்டு பயிற்சி எடுத்தபோதே எனக்கு நாக்கு தள்ளிவிட்டது. அந்த அளவுக்கு பயிற்சியே கடினமாக இருந்தது.

நிமிர்ந்து நில்...
கேள்வி: இந்த படத்திற்காக உடலை பருமனாக்கி நடித்தீர்களாமே?
பதில்: இதற்கு முன்பு சில படங்களுக்காக உடல் எடையை குறைத்திருக்கிறேன். ஆனால் சமுத்திரகனியின் நிமிர்ந்துநில் படத்துக்காக ஒரு கேரக்டரில் உடல் எடையை குறைத்தும், இன்னொரு வேடத்துக்காக உடல் எடையை அதிகப்படுத்தியும் நடித்தேன். அதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.

பயந்து விட்டேன்...
அதேபோல் இந்த பூலோகம் படத்திற்காகவும் 75 கிலோ எடையிருந்த நான் 15 கிலோ எடையை அதிகப்படுத்தி வெயிட் போட்டேன். என் உடல்கட்டை அதிகப்படுத்தும் முன்பு என்னைப்போல் இரண்டு மடங்கு கொண்ட ஒருவரின் போட்டோவை டைரக்டர் என்னிடம் காட்டி இந்த அளவுக்கு உடல் பருமனாக வேண்டும் என்று சொன்னபோது பயந்து விட்டேன்.

டய்ட் மூலம் எடைக்குறைப்பு...
இருப்பினும் கதைக்கு அவசியம் என்பதால் எடையை அதிகப்படுத்தினேன். அதற்காக 2 மாதங்கள் எடுத்துக்கொண்டேன். ஆனால் இப்போது வேறு படங்களில் நடிப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கடின உடற்பயிற்சி, டயட்ஸ் மூலம் மீண்டும் உடல் எடையை குறைத்து 75 கிலோவுக்கு வந்து விட்டேன்.

ஹாலிவுட் நடிகர்கள்...
கேள்வி: ஹாலிவுட் நடிகருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: ஏற்கனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்திலேயே ரோல்ண்ட் கிக்கிங்கருடன் நடித்துள்ளேன். அதேபோல் இந்த படத்தில் நாதன் ஜோன்சுடன் சண்டை செய்திருக்கிறேன். வெளிநாட்டு பாக்சராக வரும் அவருடன் மோதும் காட்சிகள் படு திரில்லிங்காக இருந்தது. அந்த வகையில் இந்த படத்துக்காக 3 பாக்சிங் சண்டைகளில் நடித்துள்ளேன். அந்த மூன்று காட்சிகளுமே பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் படமாக்கப்பட்டுள்ளன.

சென்னைத் தமிழ்...
கேள்வி: சென்னை தமிழ் பேச பயிற்சி எடுத்தீர்களா? இல்லை உங்களுக்கே தெரியுமா?
பதில்: சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் எனக்கும் ஓரளவு தெரியும். என்றாலும், வட சென்னைவாசிகள் பேசுவது போன்றெல்லாம் பேச தெரியாது. அதனால் அந்த ஏரியா நண்பர்களுடன் சேர்ந்து அதை எளிதாக கேட்ச் பண்ணிக்கொண்டேன்.

வடசென்னை பாக்சர்கள்...
அதேபோல், இந்த படத்தில் நடித்த மூன்று வருடங்களும் சில வட சென்னை பாக்சர்களும் என்னுடன் நடித்துள்ளனர். அதனால் அவர்களின் லாங்குவேஜை பேசுவதற்கு எனக்கு ரொம்ப எளிதாக இருந்தது.

ரொமான்ஸ் உண்டு...
கேள்வி: ஆதிபகவன் படத்தில் நீதுசந்திராவுடன் மோதியது போன்று இந்த படத்தில் த்ரிஷாவுடன் உங்களுக்கு சண்டை காட்சி உள்ளதா?
இந்த படத்தில் எனக்கும் த்ரிஷாவுக்கும் ஆக்சன் காட்சிகள் இல்லை. ஆனால், எனக்கு முறையான பயிற்சி கொடுத்து என்னை பாக்சராக்க முயற்சிப்பதே அவர்தான். அதற்காக எங்களுக்கிடையே ரொமான்ஸ் இல்லை என்று நினைத்து விட வேண்டாம். ரொமான்ஸ், முத்தக்காட்சியெல்லாம் போதும் போதும் என்கிற அளவுக்கு உள்ளது.

எனக்குப் போட்டியா..?
கேள்வி: உங்கள் அண்ணன் ஜெயம் ராஜாவை நீங்கள் போட்டியாக கருதுவதாக கூறப்படுகிறதே?
அதெல்லாம் இல்லை, என் அண்ணன் நடிக்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம். நான் ஜெயம் படத்தில் நடித்த பிறகு சில படங்களில் நடித்தபோது என் அண்ணனையும் நடிக்க சொன்னேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இணைந்து நடிப்போம்...
இப்போது அவருக்கேற்ற வாய்ப்பு வந்ததால் என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நடித்தார். அதில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால், தனி ஒருவன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்க சொன்னேன். ஆனால் இந்த படத்தில் வேண்டாம். அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டார். அதனால் இதற்கடுத்து என் அண்ணன் டைரக்சனில் நான் நடிக்கும் படத்தில் நானும், அவரும் கண்டிப்பாக இணைந்து நடிப்போம்.
கேள்வி: பூலோகம் படம் எத்தனை கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது?
பதில்: 25 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படத்தைப்பொறுத்தவரை எந்த இடத்திலும் காம்பரமிஸ் ஆகாமல் தான் நினைத்தபடி படமாக்க வேண்டும் என்று பிடிவாதமாக படப்பிடிப்பு நடத்தினார் டைரக்டர். அதனால்தான் அதிக காலம் எடுத்துக்கொண்டது.

ஷங்கருக்கு இணையாக...
அதோடு ஹாலிவுட் வில்லன், ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர், கூடவே, எப்போதும் ஒரு பாக்சர்களின் கூட்டம் என ஒவ்வொரு பிரேமையும் பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். அந்த வகையில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்துக்கு இணையாக இந்த பூலோகம் படமும் உருவாகியுள்ளது. இந்த உண்மை படம் திரைக்கு வரும்போது உங்களுக்கு தெரியும்' என இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











