கோயில்களில் பல அவமானங்கள்.. இஸ்லாமியராக மாற அதுவே காரணம்.. ஜெய் ஓபன்
சென்னை: கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஜெய். அவர் நடித்த சுப்ரமணியபுரம் திரைப்படம் மெகா ஹிட்டானது. ஆனால் அடுத்தடுத்து நடித்த படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யவில்லை. இதற்கிடையே கடந்த 2011ஆம் ஆண்டு அவர் இஸ்லாம் மதத்துக்கும் மாறினார். இந்நிலையில் அதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இசையமைப்பாளர் தேவாவின் உறவினரான ஜெய்; பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர். அப்படத்துக்கு பிறகு சோலோ ஹீரோவாக மாறிய அவர்; கோவா, வாமனன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவற்றில் சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் ஆகிய இரண்டு படங்கள்தான் பெரிய அளவில் பெயரை பெற்றுக்கொடுத்தது. இருப்பினும் திரைத்துறையில் திறமை வாய்ந்த நடிகர் என்பதால் இன்னும் அவருக்கான அங்கீகாரம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பாது ஒருதரப்பினரின் பேச்சு.

விஜய்யின் தம்பி: ஜெய்யை பொறுத்தவரை விஜய் படத்தில் அறிமுகம் ஆனதாலோ என்னவோ அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்கூட வேளச்சேரி தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து ஜெய் பரப்புரை மேற்கொண்டார். அவர் ஆசைப்பட்டபடி விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டதால் அவர் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்.
விளக்கிய ஜெய்: பரப்புரைக்கு சென்றது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "ரஜினி சாரைத்தான் விஜய் அண்ணா ஃபாலோ செய்வதாக எல்லோரும் சொல்வார்கள். சிலரோ, அவர் கார்த்திக் சாரை ஃபாலோ செய்வதாக சொல்வார்கள். விஜய்யின் சில மேனரிசங்களை கூர்ந்து கவனித்தால் அதில் கார்த்திக் சாரின் டச் இருப்பது தெரியும். சில மேனரிசங்கள் ரஜினி சார் மாதிரி இருக்கும். அதிலும்கூட கார்த்திக் சாரின் சாயல் தெரியும்.
எனக்கு எந்த கவலையும் இல்லை: விஜய் அண்ணா ஸ்க்ரீனில் அழுதால்கூட நான் நிஜத்தில் அழுதுவிடுவேன். இந்த வாழ்க்கையையே அவர்தான் கொடுத்தது. அவருக்கு ஆதரவு கொடுப்பதல் இந்த வாழ்க்கை போகுமென்றால் அதை இழக்கவும் நான் தயார். எனக்கு எந்தக் கவலையும் இல்லை" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது எதற்காக என்பது குறித்தும் விளக்கமளித்திருக்கிறார்.
ஜெய் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நான் அனைத்து கடவுள்களும் ஒன்றுதான் என நினைத்திருந்தேன். ஆனால் கோயிலில் சில அவமானங்கள் எனக்கு நடந்தன. அதேசமயம் நான் மசூதியில் தொழுகும்போது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அங்கே எல்லோரையும் ஒரே மாதிரிதான் பார்த்தார்கள். வெளியே வந்ததும்தான் என்னிடம் பேசவே செய்தார்கள். அங்கே எல்லோரையும் சமமாக பார்க்கிறார்கள்.மசூதியின் உள்ளே வந்துவிட்டால் கடவுளைத்தான் பெரிதாக நினைக்கிறார்கள். அதனால் நமக்கு கடவுளை வேண்டிக்கொள்வதற்கு நேரம் அதிகம் கிடைக்கிறது. யாரும் உள்ளே நம்மை தள்ளி விடுவதில்லை என்பதால்தான் இந்த மதத்தை பின்பற்ற ஆரம்பித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
