சிவகார்த்திகேயனுக்கு கதை சொல்ல முடியாது.. ஓபனாக பேசிய ஜன நாயகன் இயக்குநர் ஹெச்.வினோத்
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தப் படம் தவிர்த்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இப்படிப்பட்ட சூழலில் சிவகார்த்திகேயன் குறித்து விஜய் நடிக்கும் கடைசி படமான ஜன நாயகன் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
மாவீரன், அயலான் என வரிசையாக இரண்டு வெற்றிகளை கொடுத்த சிவகார்த்திகேயன் கடைசியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்தார். கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்த அந்தப் படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்ற அமரன் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்வரை வசூலித்து மாஸ் காட்டியது.

சிவாவின் மார்க்கெட்: அமரன் படம் 350 கோடி ரூபாய் வசூலித்ததைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. சம்பளமாக 50 கோடி ரூபாய்வரை அவர் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் விஜய், அஜித் ஆகியோரின் படங்களின் வசூலைவிடவும் அமரன் திரைப்படம் செய்த வசூல் அதிகம் என்பதால் எஸ்கே மீதுதான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கவனம் இப்போது அதீதமாக இருக்கிறது. இதனால் அவரது வீட்டில் தயாரிப்பாளர்கள் மொய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
பராசக்தி ஹீரோ: அமரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு இப்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். அதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சூழலில்; டைட்டில் டீசர் சமீபத்தில்தான் வெளியானது. அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக அதைப் பார்த்த ரசிகர்கள் இப்படிப்பட்ட படத்தையா சூர்யா மிஸ் செய்தார் என்றும் ஓபனாகவே கூற ஆரம்பித்தார்கள்.
என்ன கதை?: இந்தப் படமானது 1965ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்தும்; அதில் உயிரிழந்தவர்களை பற்றியும் உருவாகியிருப்பதாக தெரிகிறது. கண்டிப்பாக இந்தப் படமும் சிவாவின் கரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்று நல்லதொரு பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் எஸ்கே ஒரு படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் இயக்குநர்: இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் ஜன நாயகன் படத்தை இயக்கிவரும் வினோத் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொல்ல வேண்டுமென்று நிறைய யோசித்திருக்கிறேன். ஆனால் அவருக்கான கதையை யோசிக்கவே முடியவில்லை. அதற்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். அவர் கேஷுவலாக காமெடி செய்துவிடுவார். அப்படிப்பட்ட ஜானரில்தான் அவருக்காக கதையை தயார் செய்ய வேண்டும். ஆனால் அப்படி என்னால் யோசிக்க முடியவில்லை. அதனால் ஒருமுறை அவரிடம், நீங்களே ஒரு கதை சொல்லுங்க சார் என கேட்டிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











