சாரிங்க.. விஜய்யின் ஜனநாயகன் படம் பற்றி ரஜினி கொடுத்த ரியாக்ஷன்.. சூப்பர் ஸ்டார் விவரம்
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக ரிலீஸாகவில்லை. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு சென்றது பட தயாரிப்பு நிறுவனம். அப்போதும் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக வழக்கை வாபஸ் பெற்ற அந்நிறுவனம்; படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனநாயகன் படம் பற்றி பேசியிருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் ஜனநாயகன் படம்தான் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இருந்தாலும்; முழுக்க முழுக்க அதை அப்படியே தமிழுக்கு ஜெராக்ஸ் எடுக்கவில்லை. மாறாக இயக்குநர் வினோத் தன்னுடைய டச், ஸ்டைல் ஆகியவற்றையும்; விஜய்க்காக கதையில் பல மாற்றங்களையும் சேர்த்து புதுமையாக படைத்திருக்கிறார் என்பது ட்ரெய்லரை பார்க்கையில் தெரிந்தது.

படத்துக்கு சிக்கல்: படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டியிருந்தது. அதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தியும் ரேஸில் நின்றது. கண்டிப்பாக கடைசி படத்தை மறக்க முடியாத அனுபவமாக்கிட வேண்டுமென துடித்தார்கள் ரசிகர்கள். ஆனால் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டார்கள். அதன் காரணமாக திட்டமிட்டபடி படத்தை ஜனவரி மாதத்துக்கு ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
ஒன்றும் நடக்கவில்லை: எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கெல்லாம் சென்றது பட தயாரிப்பு நிறுவனம். அங்கேயும் எதுவும் சாதகமாக நடக்கவில்லை. அதனால் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு; மறு தணிக்கைக்கு அனுப்பியது. அந்த குழுவானது படத்தை இப்போது பார்த்துவிடும் அப்போது பார்த்துவிடும் என இழுத்தடிக்கப்பட்டு; ஒருவழியாக சமீபத்தில்தான் படத்தை அதிகாரிகள் பார்த்ததாக தெரிகிறது. மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு படமானது ரிலீஸாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வலுத்த கண்டனங்கள்: ஜனநாயகன் படத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் தொடங்கி சிபி ராஜ் உள்ளிட்ட கடைசி நிலையில் இருக்கும் ஹீரோக்கள் வரை தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். தவெகவினர் இதிலும் திமுக மீது பழியை போட்டாலும்; இதற்கும் அந்தக் கட்சியினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல விஷயங்கள் குறித்து ஓபனாக பேசினார்.
ரஜினி பேச்சு: அவர் பேசுகையில், "நானும், கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் கதை லாக் செய்யப்பட்டுவிட்டது. ஜெயிலர் 2 ஷூட்டிங் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் இருக்கின்றன என்றார். அவரிடம் ஜனநாயகன் படம் பற்றி கேட்கப்பட்டதற்கும், 'மன்னித்துவிடுங்கள். அதை பற்றி பேசுவதில்லை' என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும். இந்த வயதை விட்டால் அவ்வளவுதான். மது, கஞ்சா போதைக்கு அடிமையாகாதீர்கள். உங்கள் வாழ்க்கையை சீரழிந்துவிடும்" என்றார்.


Click it and Unblock the Notifications















