ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி என்ஜாய் செய்கிறாரா?.. அவர் என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை; ரவியுடன் பேசுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்று ஆர்த்தி தெரிவித்திருக்கிறார். இருப்பினும் விவாகரத்து பெறுவதில் ரவி உறுதியாக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க ஜெயம் ரவி போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரவியும், ஆர்த்தியும் காதலோடும் அன்யோன்யத்துடனும் வாழ்ந்துவருவதாக பலரும் கருதினார்கள். ஆனால் சமீபகாலமாக அவர்கள் இரண்டு பேருக்குமிடையே சில வாக்குவாதங்கள் தொடர்ந்து வருகின்றன; கண்டிப்பாக இரண்டு பேரும் பிரியப்போகிறார்கள் என்று தகவல்கள் வரிசையாக வெளியாகிக்கொண்டேயிருந்தன. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

ரவி வெளியிட்ட அறிவிப்பு: அந்தத் தகவல்களை உறுதியாக்கும்படி ரவி கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தன்னுடைய நலன் சார்ந்தவர்களுக்காக எனது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ஆர்த்தி, 'ஜெயம் ரவியிடம் இதுதொடர்பாக பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அவர் தரப்பிலிருந்து அதற்கான வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார்.
அவமானப்படுத்தப்பட்டேன்: இதனையடுத்து பேசிய ஜெயம் ரவி, வீட்டு வேலையாட்களுக்கு கொடுத்த மதிப்பைக்கூட ஆர்த்தி தரப்பில் தனக்கு கொடுக்கவில்லை. சின்ன சின்ன செலவுக்கான பணத்துக்குக்கூட அவமானப்படுத்தினார். ஒருகட்டத்தில் மூச்சு முட்டியது. வீட்டை விட்டு வெளியேறும்போது என்னிடம் கார் மட்டும்தான் இருந்தது என்று சொன்னார். மேலும் ஆர்த்தியிடம் இருக்கும் தன்னுடைய உடைமைகளை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்.
ஆர்த்தியின் விளக்கம்: ஜெயம் ரவி அப்படி பேசியதும் பலரும் ஆர்த்தியை குறை சொல்ல ஆரம்பித்தார்கள். நிலைமை இப்படி இருக்க நேற்று ஒரு விளக்கம் கொடுத்த ஆர்த்தி, "இவ்வளவு நாட்கள் நான் அமைதியாக இருந்தது எனது குற்றவுணர்ச்சி என்றோ, பலவீனம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை ரொம்பவே மதிப்பவள் நான். யாருடைய நற்பெயரையும் கெடுக்கும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன். இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ரவியிடம் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
பிரதர்: சூழல் இப்படி இருக்க ஜெயம் ரவி பிரதர் படத்தில் நடித்திருக்கிறார். எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் அந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திட்டமிடப்படாது சந்தோஷத்தை என்ஜாய் செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனை கவனித்த ரசிகர்களோ ஆர்த்தியை பிரிந்ததைத்தான் ரவி இப்படி மறைமுகமாக சொல்கிறாரோ என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











