விஜய், சிவகார்த்திகேயனுக்கு என்னங்க சென்சார் கட்.. அதிக கட்டுகள் வாங்கிய ஹீரோ யார் தெரியுமா?.. இத்தனையா?
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்துக்கு அதிகாரிகள் சென்சார் வழங்க மறுத்துவிட்டதால் இப்போது அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதேபோல் சிவாகார்த்திகேயனின் பராசக்திக்கும் மொத்தம் 25 இடங்களில் திருத்தங்கள் சொன்னார்கள் அதிகாரிகள். அவை அனைத்தும் செய்யப்பட்டுத்தான் பத்தாம் தேதி படம் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ஏற்பட்ட சென்சார் பிரச்னைகள் பெரிய பேச்சு பொருளாக மாறியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் பகவந்த் கேசரியில் சில விஷயங்கள் எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க அந்தப் படத்தின் ரீமேக்காக இல்லாமல் வினோத் இயக்கியிருப்பது விஜய் ரசிகர்களிடம் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜனவரி ஒன்பதாம் தேதி படமானது ரிலீஸாவதாக இருந்தது. அதற்கான அத்தனை வேலைகளிலும் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் செய்ய தொடங்கிவிட்டது.
சென்சார் பிரச்னை: ஆனால் முதலில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து மறு ஆய்வு கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டது. அவர்களும் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதால்; வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடியது கேவிஎன் நிறுவனம். வழக்கை விசாரித்த தனி நீதிபதி யு/ஏ சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு சென்றது மத்திய தணிக்கை குழு வாரியம்.

உத்தரவுக்கு தடை: மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமோ; தனி நீதிபதி கொடுத்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் 21ஆம் தேதி வழக்கு விசாரணை நடக்கும் எனவும் அறிவித்தார். எனவே பொங்கலுக்கு படம் ரிலீஸாகிவிடும் என உற்சாகத்தில் இருந்த படக்குழுவினரும், ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினார்கள். விஜய்யின் கடைசி படத்துக்கு இவ்வளவு பெரிய முட்டுக்கட்டையை போடுவார்கள் என பலரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். .
பராசக்திக்கும்: ஜனநாயகன் படத்துக்கு மட்டுமின்றி பராசக்தி படத்துக்கும் இதே நிலைமை வர பார்த்தது. மொத்தம் 25 இடங்களில் கட் மற்றும் மியூட்டை போட்டது சென்சார் குழு. ஆனால் எப்படியாவது திட்டமிட்டபடி பத்தாம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்த படக்குழுவினர்; அதிகாரிகள் சொன்ன அத்தனை திருத்தங்களுடனும் படத்தை வெளியிட்டார்கள். இங்கே சென்சார் சொன்ன திருத்தங்களுடன் ரிலீஸானாலும்; வெளிநாடுகளில் அன் கட் வெர்ஷன் வெளியானது.
ஜீவா பேட்டி: இவ்விரண்டு படங்களுக்கும் நடந்த சென்சார் பிரச்னை பலரிடம் விவாதத்தை உண்டு பண்ணியது. படைப்பு சுதந்திரத்தை கடிவாளம் போட்டு நெருக்குகிறார்கள் எனவும் பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் பிரபல நடிகர் ஜீவா இதுகுறித்து பேசுகையில், "எனக்குதான் இதுவரை அதிக சென்சார் கட்டுகள் விழுந்திருக்கினன. ஜிப்ஸி என்று ஒரு படத்தில் நடித்தேன். மொத்தம் 48 இடங்களில் கட் சொன்னார்கள். அவர்கள் வைத்து செய்த முதல் ஹீரோ நான்தான். அதை முடித்துவிட்டு வந்தால் கொரோனாவும் எங்களை செய்துவிட்டது" என்றார். இப்போது தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. இப்படம் ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











