எப்படி மனசு வருது?.. தலைவர் தம்பி தலைமையில் ப்ரோமோஷனால் வில்லங்கம்.. அமைச்சரை கிண்டலடித்து மாட்டிய ஜீவா
சென்னை: ஆர்.பி.சௌத்ரியின் மகன்களில் ஒருவரான ஜீவா தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர். அவர் தன்னுடைய கரியர் ஆரம்பத்திலேயே ராம், கற்றது தமிழ் என முக்கியமான படங்களை செய்தவர். இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு சென்றிருக்கக்கூடியவர் என திரைத்துறையில் அனைவராலும் சொல்லப்படும் அவர்; இப்போது தலைவர் தம்பி தலைமையில் நடித்திருக்கிறார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி.சௌத்ரி. அவரது மகன் ஜீவாவும் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். வாரிசு நடிகர் என்று அடையாளம் குத்தப்பட்டாலும் இள வயதிலேயே திறமைகளை வளர்த்துக்கொண்டார். அமீரின் ராம், ராமின் கற்றது தமிழ் என தனது வயதுக்கு மீறிய ரோல்களை அப்போதே ஏற்று நடித்து திரைத்துறையில் படைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒருபக்கம் இப்படிப்பட்ட படங்களை செய்துகொண்டே மறுபக்கம் கோ, தெனாவட்டு என கமர்ஷியல் ஜானர் படங்களையும் செய்தார்.
உயரத்துக்கு போயிருக்கக்கூடியவர்: பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருந்தார். கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கான உயரம் இன்னும் இருக்கிறது என பலர் கணித்தார்கள். ஆனால் எங்கே மிஸ் ஆனது என்று தெரியவில்லை இடையில் அவர் நடித்த படங்கள் ஒன்றுகூட சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மூன்று வாரங்களுக்கு ஒரு படம் வந்தாலும் அவருக்கு வெற்றி கொடுக்கக்கூடியதாக அமையவில்லை.

தலைவர் தம்பி தலைமையில்: இப்படிப்பட்ட சூழலில்தான் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்தார். இதில் அவருடன் இளவரசு, தம்பி ராமைய்யா என பலர் நடித்தார்கள். சிம்ப்பிள் அவுட் லைனை வைத்துக்கொண்டு திரைக்கதையில் மக்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் சேர்த்து படத்தில் இயக்குநர் மேஜிக் செய்துவிட்டார். பராசக்தி, வா வாத்தியார் படங்களுக்கு செல்லும் கூட்டத்தைவிடவும் இப்படத்துக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.
சிக்கிய ஜீவா: இந்நிலையில் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜீவா தியேட்டர் விசிட் செய்தார். அப்படி ஒரு தியேட்டர் விசிட்டின்போது, கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுதுகொண்டே, 'ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்கனு சொன்னேன். கேட்டானுங்களா' என சொல்லியதை; அதே மாதிரி சொல்லி காண்பித்தார். அது அங்கிருந்த ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் சோஷியல் மீடியாக்களில் அவரை வெளுத்துவருகிறார்கள்.
எப்படி மனது வருகிறது?: திரைப்படத்திலேயே இதனை கிண்டலடிக்கும் தொனியில் இருப்பதை பார்த்து பலரும் கண்டித்திருந்தார்கள். இப்போது ஜீவா மீண்டும் அதே மாதிரி பேசியிருப்பதை பார்த்து, 'அமைச்சர் உண்மையான கவலையோடு கதறியது அது. அதை போய் கிண்டலடிக்கும் தொனியில் எப்படி பேச மனம் வருகிறது' என கேள்வி எழுப்பும் அவர்கள்; இவர் தன்னை விஜய்யின் தம்பி என்று வேறு சொல்லிக்கொள்வார். எனில் விஜய்யின் தம்பிகளே இப்படித்தானா எனவும் லாக் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











