தாறுமாறாக பைக் ஓட்டிய வழக்கு: ஜான் ஆபிரகாமை மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் படுவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று 2 வாலிபர்கள் மீது மோதினார். இதில் 2 வாலிபர்களும், அவரும் காயமைடைந்தனர். விபத்து நடைபெற்ற பிறகு ஜான் ஆபிரகாம் தன்னுடன் காயமடைந்த 2 வாலிபர்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இது குறித்த வழக்கு பந்த்ரா மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பில் கவனக்குறைவு மற்றும் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய குற்றத்திற்காக ஜான் ஆப்ரகாமிற்கு 15 நாள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் அந்த நீதிமன்றம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜான் ஆப்ரகாம், ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை அதனை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையையும் நிறுத்தி வைத்தது. இதையடுத்து ஜான் ஆபிரகாம் போலீசாரால் விடுவிக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











